சென்னை:
ரஜினி அரசியலுக்கு வந்தால் தோல்வி அடைவார்; அவருக்கென ஒரு கொள்கை கிடையாது. அவரால் அரசியலில் வெற்றி பெற முடியாது’ என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி கருத்து தெரிவித்துள்ளார்.
ஆங்கில சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ரஜினியின் அரசியல் பேச்சுகள் பற்றி குறிப்பிட்டார். அப்போது அவர், ”ரஜினிக்கென ஒரு கொள்கை கிடையாது. அவர் தமிழர் இல்லை. கர்நாடகாவில் பிறந்த மராத்திய பின்புலத்தைக் கொண்டவர். தற்போது அவரின் அரசியல் பார்வையில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் அரசியல் குறித்த கருத்தையெல்லாம் பேசி வருகிறார். அவர் அரசியலுக்கு வந்தால், கண்டிப்பாக தோல்வியடைவார்.” என்று விமர்சித்துள்ளார்.
முன்னதாக, திங்கள்கிழமை நேற்று சென்னையிலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது, தான் அரசியலுக்கு வருவதும் வராததும் ஆண்டவன் கையில் இருக்கிறது என கூறினார்.
ரஜினிகாந்த் பேசியதைக் கேட்டபோது, அவர் அரசியலுக்கு வர தயாராகி விட்டார் என்றே தெரிகிறது என ரஜினி ரசிகர்கள் கூறி வருகின்றனர். ரஜினியின் இந்தப் பேச்சுக்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர். ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம் என தமிழக பாஜக தலைமை கருத்து தெரிவித்த சூழலில், பாஜக மூத்த தலைவரான சுப்ரமணியன் சாமி ரஜினியின் பேச்சுக்கு தன் விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ரஜினியின் அரசியல் கருத்துகள் குறித்துப் பார்க்கும் போது, சுப்பிரமணியன் சுவாமி சொன்னதன் பின்னணி நன்கு தெரியவரும். போயஸ் கார்டன் பகுதியில் தான் குடியிருக்கும் வீட்டுப் பகுதியில் தனக்கு ஜெயலலிதாவால் ஏற்பட்ட தனிப்பட்ட வெறுப்பின் காரணத்தால் அரசியல் பேசினார் ரஜினி. ஜெயலலிதாவை சமாளிக்க திமுக தலைவர் கருணாநிதியின் தயவை நாடினார். ஓர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், கருணாநிதி தனக்கு பெரும் உதவி செய்துள்ளதாகவும், செய்நன்றி மறக்காமல், அவர் இருக்கும் வரை தாம் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்றும் கூறினார். பின்னாளில் ஜெயலலிதாவுடன் நட்பு கொண்டாடினார்.
சென்ற பேரவைத் தேர்தல் நேரத்தில் மோடி சென்னை வந்திருந்தபோது, ரஜினியின் வீடு தேடிச் சென்று வாழ்த்து தெரிவித்தார். அப்போதும் ரஜினி தனக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை என்றார். இது போன்ற காரணங்கள் ரஜினியை நம்பகத்தன்மை அற்றவராகவே காட்டுகிறது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. அதையே சுப்பிரமணிய சுவாமியும் பிரதிபலித்துள்ளதாகவே எண்ணத் தோன்றுகிறது.