தங்கம், வைரம் புதையல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் திருவிசநல்லூரில் உள்ள பழமையான கோயிலுக்குள் நவீன கருவிகள் உதவியுடன் பள்ளம் தோண்டிய 2பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருவிசநல்லூரில் 1,000 ஆண்டுகள் பழமையான கற்கடேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் அறநிலையத்துறை நிர்வாகத்தின்கீழ் இயங்கி வருகிறது. நேற்று இரவு 7 மணியளவில் கோயிலுக்குள் 2 நபர்கள் புகுந்து மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட நவீன கருவிகளுடன் பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தனர்.
இதனை கண்ட கிராம மக்கள் திரண்டு அவர்களை பிடித்து திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் கும்பகோணத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இவர்களில் ஜிப்ரு காலித் சமீபத்தில் தான் மலேசியாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். அவர் மலேசியாவில் இருக்கும்போது யூ டியூப்பில் உள்ள ஒரு வீடியோவில் பழங்கால கோயில்களில் தங்கம், வைரங்கள் புதையல் இருக்கும் என்பதை பார்த்துள்ளார்.
தமிழ்நாட்டில் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் பழமை வாய்ந்த ஏராளமான கோயில்கள் உள்ளது என்பதை அறிந்த ஜிப்ரு, அந்த கோயில்களில் தோண்டினால் தங்கம், வைரம் புதையல் கிடைக்கும் என பீர் முகமதுவிடம் கூறி உள்ளார்.
இதையடுத்து கடந்த 10 நாட்களாக கோயில் உள்ள பகுதியை இருவரும் நோட்டமிட்டுள்ளனர். பின்னர் ஆந்திரா சென்று விரைவில் குழி தோண்டும் சிறிய கருவியை வாங்கி வந்து சென்று பள்ளம் தோண்டி உள்ளனர்.
இவர்கள் புதையல் எடுக்கத்தான் வந்தார்களா, அல்லது வேறு நோக்கம் உண்டா, சிலை கடத்தல் கும்பலுக்கோ தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருவனைக்காவல் கோவிலில் சமீபத்தில் புதையல் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.