மதுரை: மதுரை மாவட்டத்தில் மட்டும் ஆட்டோக்கள் இயங்க விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதா என மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
மதுரை மாவட்டத்திலும், மதுரை நகரிலும் சில இடங்களில் ஆட்டோக்கள் விர் விர் என்று பறக்கின்றன. கொரோனோ தடை என்று ஊரே முடங்கி, போக்குவரத்தும் கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கும் போது, ஆட்டோகள் சில இயக்கப்படுவதாகவும், கூடுதல் கட்டணம் வசூலித்து ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
மதுரை அண்ணா பஸ் நிலையம், கருப்பாயூரணி, கல்மேடு நகர், சக்கிமங்கலம், வரிச்சூர், ஒடைப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை நேரங்களில் ஷேர் ஆட்டோக்களை சிலர் இயக்கி ரூ. 50 வரை கட்டணம் வசூலித்து வருவதாகவும் பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.
கடந்த சில நாட்கள் வரை, மதுரை புறநகர் பகுதிகளான, கருப்பாயூரணி, கல்மேடு நகர் பகுதிகளிலிருந்து அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு சில ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோ இயக்கி வந்தனர். இந்த நிலையில் வியாழக்கிழமை காலை மதுரை நகர் பகுதிகளிலும் சில ஷேர் ஆட்டோக்கள் இயங்கின.
இது குறித்து பொதுமக்கள் சிலர் கூறிய போது, சில பகுதிகளில் காலை நேரம் மட்டும் கூலித் தொழிலாளிகளை ஆட்டோவில் குறைவான எண்ணிக்கையில் ஏற்றி ரூ. 50 வரை கட்டணம் வசூலிக்கின்றனர். மதுரை நகர் பகுதிகளை பொறுத்தமட்டில் போலீஸார் அதிகம் உள்ள பகுதிகளில் ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.
சில ஆட்டோக்கள் காய்கறி அத்தியாவசியம் என எழுதி ஆட்டோவில் ஓட்டப்பட்டு, விவசாயிகளை ஏற்றிச் செல்வதைப் போல போலீஸாரை ஏமாற்றியும் வருகின்றனர். எனவே கொரோனா தாக்கம் குறையும் வரை அரசு விதிகளின்படி, ஆட்டோக்கள் இயக்கத்தைக் கண்காணிக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை