புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்வு அறிவிக்கப் பட்டிருக்கிறது. இது குறித்து, அரசாணை வெளியிடப் பட்டிருக்கிறது.
தமிழகத்தின் டாஸ்மாக் விலைக்கு நிகராக புதுச்சேரியிலும் மதுபானங்கள் விலையை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் விற்கப்படாத மதுபானங்களை புதுச்சேரியில் விற்றால் கூடுதலாக 25% கொரோனா வரி விதிக்கப்படுகிறது!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைதடுப்பதற்காக பிறப்பிக்கப் பட்ட ஊரடங்கு காரணமாாக பல்வேறு மாநிலங்களில் வருமானவரி இழப்பு ஏற்பட்டது. இதனால் நாடு முழுவதிலும் பல்வேறு மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் வரி வருவாயை பெருக்க மதுக் கடைகளைத் திறந்தன.
தமிழகத்திலும் நேரக்கட்டுப்பாடு, சமூக இடைவெளி கடைப்பிடித்தல் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் புதுச்சேரியில் மதுக் கடைகள் திறப்பதற்கு அனுமதி தரப்படாமல் இருந்ததால், தமிழக எல்லையை ஒட்டி உள்ள விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டப் பகுதிகளுக்கு புதுச்சேரி மக்கள் மது வாங்க குவிந்தனர். இது வரலாற்றில் விநோதமாகப் பார்க்கப் பட்டது. வழக்கமாக தமிழகப் பகுதிகளில் இருந்துதான் புதுச்சேரிக்கு மது பானங்களை வாங்க மக்கள் படை எடுப்பர். மாறாக, புதுவை மக்கள் தமிழகப் பகுதிக்கு வருவது பெரிய அளவில் பேசப் பட்டது.
இந்நிலையில், புதுச்சேரியிலும் மதுக் கடைகளைத் திறப்பது குறித்து முடிவு செய்ய கடந்த 18-ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். தொடர்ந்து கலால்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்
இதை அடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறிய போது, புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட பகுதிகளில் 25ம் தேதி திங்கள் நாளை முதல் மதுக் கடைகள் திறக்கப்படும். காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
மதுபானங்கள் மீது 25 % வரையில் வரிகள் உயர்த்தப்பட்டுள்ளதால் அதன் விலை அதிகரித்துள்ளது. இந்த வரி உயர்வு அடுத்து வரும் 3 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்றார் அவர்.