கோயம்பேட்டில் இருந்து திருமழிசைக்கு மாற்றப்பட்ட தற்காலிக சந்தையில், சேமிப்பு வசதி இல்லாததால் மூட்டை மூட்டையாக காய்கறிகள் வீணாகி குப்பையில் கொட்டப் படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றின் மையப் புள்ளியாக மாறிப்போன சென்னை கோயம்பேடு காய்கனிச் சந்தை மூடப்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் திருமழிசைக்கு மாற்றப்பட்டது. சிறு வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அங்கு மொத்த வியாபாரிகள் மட்டுமே வியாபாரம் செய்து வருகின்றனர்.
கோயம்பேடு சந்தையில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் டன்கள் வரை விற்பனையான காய்கனிகள் திருமழிசையில் சில நூறு டன்களே விற்பனையாவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கோயம்பேடு சந்தை, நகரப் பகுதியில் அமைந்திருப்பதால் அதிகபட்ச விபாபாரம் நடக்கும். ஆனால் திருமழிசை நகரப் பகுதியை விட்டு தொலை தூரத்தில் இருப்பதால், வியாபாரம் இல்லை என்று வருத்தப் படுகின்றனர் வியாபாரிகள்.
எனவே சுகாதாரப் பணிகளை முடித்துவிட்டு கோயம்பேடு சந்தையை விரைவில் திறக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர். திருமழிசையில் தினசரி மூட்டை மூட்டையாக நூற்றுக்கணக்கான கிலோ காய்கனிகள் குப்பையில் கொட்டப்பட்டு வருவதாகவும் அவர்கள் புகார் கூறினர்.
கோயம்பேடு சந்தையில் காய்கனிகளை சேமித்து வைக்கும் கிட்டங்கி வசதி இருந்தது, தற்போது வெயில் சுட்டெரிக்கிறது. இங்கே சேமிப்புக் கிட்டங்கி வசதி இல்லை. மேலும் மொத்த வியாபாரிகளிடம் இருந்து வாங்கிச் செல்ல சிறு வியாபாரிகள் அனுமதிக்கப் படவில்லை. இதனால் காய்கனிகள் ஒவ்வொரு நாளும் வீணாகின்றன… என்று கூறுகின்றனர் சந்தை வியாபாரிகள்!