கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா பாதித்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு வசூலிக்கப்பட வேண்டிய கட்டணத்தை நிர்ணயிக்குமாறு இந்திய மருத்துவக் கவுன்சிலின் தமிழ்நாட்டுப் பிரிவு தமிழக அரசுக்கு பரிந்துரைத்திருந்தது.
இந்த பரிந்துரையை ஏற்று, கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரத்தை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
03.06.2020 அன்று இவ்வரசு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா நோய் தொற்றிற்கு கட்டணமில்லாமல் சிகிச்சைகள் அளிப்பது குறித்து ஒர் ஆணை வெளியிடப்பட்டது.
கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளை அணுகும் நோயாளிகள், தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்களை எழுப்பி வருகின்றனர். இது தொடர்பான செய்திகள் பத்திரிக்கைகளிலும் ஊடகங்களிலும் வெளியிடப்பட்டு வருகின்றன.
இதனைத் தவிர, இந்திய மருத்துவச் சங்கம் தமிழ்நாடு கிளை நிர்வாகிகள் கொரோனா நோய் தொற்று கண்ட நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய கட்டணம் தொடர்பாக சில கோரிக்கைகளை அரசின் முன் வைத்தனர்.
இதனைத் தொடார்ந்து, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளிடமிருந்து பெற அனுமதிக்கப்படவேண்டிய தினசரி கட்டணங்கள் மற்றும் நிபந்தனைகள் குறித்து தனது அறிக்கையினை அரசிடம் அளித்தது.
இவ்வறிக்கையை கவனமுடன் ஆய்வு செய்த தமிழ்நாடு அரசு, மக்கள் நலன் கருதி கட்டணங்களை நிர்ணயிக்கவும் சில நிபந்தனைகளை விதிக்கவும் உத்தேசித்து அவ்வாறே உத்தரவிடுகிறது.