மதுரையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகள் தயங்குவதாக புகார் எழுந்துள்ளது.
மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. பரவை காய்கறி மார்க்கெட்டில் ஒரே நாளில் 11 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு ஒரு கோயம்பேடு போன்று மதுரைக்கு பரவை ஆகிவிடுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
மதுரையில் ஒரு குறிப்பிட்ட பகுதி என்றில்லாமல் நகரின் எல்லாம் பகுதிகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். புறநகர் பகுதியிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வருபவர்களால் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.
நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகும் போது, கொரோனாவிற்கு 750 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ள மதுரை அரசு மருத்துமனையால் அனைவருக்கும் சிகிச்சை அளிப்பது கடினம். பணம் செலுத்தியோ, முதல்வர் காப்பீட்டு திட்டத்திலோ சிகிச்சை பெறவிரும்புபவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை தர வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் மதுரையில் உள்ள ஓரிரு தனியார் மருத்துவமனைகள் தவிர, எந்த மருத்துவமனையும் கொரோனா நோயாளிகளை ஏற்கவில்லை என புகார் எழுந்துள்ளது. மேலும் பெரிய மருத்துவமனைகள் கூட கொரோனா சிகிச்சைக்கென குறைந்த அளவு படுக்கைகளையே ஒதுக்கியுள்ளன.
அரசின் இணையதளத்தில் தங்களிடம் உள்ள படுக்கை விபரங்களை குறிப்பிட்டு இருந்தாலும், கொரோனா நோயாளிகள் வந்தால் அரசு மருத்துவமனைக்கே அனுப்பி விடுகின்றர். தலைசிறந்த தனியார் மருத்துவமனைகள் நிறைந்த, ‘மருத்துவ சுற்றுலாவுக்கு’தகுதியான இடம் என அறியப்பட்ட மதுரையில் உள்ள மருத்துவமனைகள் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மதுரை மக்களுக்கு மருத்துவம் பார்க்க தயங்கலாமா. அவர்கள் ஒதுங்கி கொள்வது வேதனையான விஷயம்
- ரவிச்சந்திரன், மதுரை