கடந்த வாரம், கொரோனா பரவல் தொடர்பில், திருமலா திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகளின் மீது ஆத்திரமடைந்து கருத்து பதிவு செய்தார் ரமண தீட்சிதர். இன்று கொரோனாவுக்கு அர்ச்சகர் ஒருவர் மரணமடைந்த சோகம், திருப்பதி அர்ச்சகர்களிடையே ஆறாத ரணமாகியிருக்கிறது.
கொரோனா பரவல் குறித்து எந்த எச்சரிக்கை உணர்வும் இன்றி, திருப்பதி கோயில் நிர்வாகம் செயல்படுவதாக ரமண தீட்சிதர் டிவிட்டர் பதிவில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் மீது எரிந்து விழுந்தார்.
ஸ்ரீவாரி ஆலயத்தில் பணியாற்றும் அர்ச்சகர்களில் 15 பேர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் இன்னும் 25 பேருக்கு செய்த பரிசோதனைகளின் ரிசல்ட் வர வேண்டி உள்ளது என்றும் கூறியிருந்தார்.
பக்தர்களின் தரிசனத்தை நிறுத்தி வைப்பதற்கு டிடிடி அதிகாரிகள் நிராகரித்துள்ளார்கள் என்றும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடைப்பிடித்த பிராமணர்களுக்கு எதிரான நடைமுறைகளையே திதிதே அதிகாரிகளும் கடைப்பிடிக்கிறார்கள் என்றும் விமர்சித்தார்.
முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இதில் தலையிடாவிட்டால் மிகப் பெரும் ஆபத்து நேரிடும் என்று என்று ரமண தீட்சிதர் எச்சரித்தார்.
ஆனால், திருப்பதி கோயிலை சமூக இடைவெளியைப் பின்பற்றி பக்தர்களை அனுமதித்திருப்பதாக திருமலை தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்தனர். இதனால் பக்தர்கள் தரிசனத்துக்கு வரத் தொடங்கினர். ஆனால், வெறும் முகமூடியும் சமூக இடைவெளியும் கொரோனா பரவலை தடுத்து நிறுத்துவதாகத் தெரியவில்லை.
இரு தினங்களுக்கு முன் திருப்பதி மடத்தின் பெரிய ஜீயர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இப்போது சிகிச்சையில் இருக்கிறார். திருப்பதி ஆலய அர்ச்சகர்களில் முன்னாள் மூத்த அர்ச்சகர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இது திருமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.