திருஞானசம்பந்தரையும் தேவாரப் பதிகங்களையும் அவதூறாக இழிவுபடுத்திப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த சுந்தரவள்ளி என்பவரை கைது செய்ய வலியுறுத்தி திருக்கோவில் ஓதுவாமூர்த்திகள் மற்றும் சிவனடியார்கள் இன்று (31.7.2020 – வெள்ளி) காலை 11 மணி அளவில் நெல்லை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
நெல்லையப்பர் திருக்கோவில் ஓதுவா மூர்த்தி செந்தில் ஆறுமுகம் தலைமையில், இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் கா.குற்றாலநாதன் முன்னிலையில், காரைக்கால் அம்மையார் திருமுறை வழிபாட்டு குழுவின் முத்துக்குமாரசுவாமி, சிவ வீரபுத்திரன் (குன்னத்தூர் சிவனடியார் குழு), சுப்பிரமணியன் (குறிச்சி சிவனடியார் குழு), நாராயணன் (டவுன் சிவனடியார் குழு ), செல்லப்பா ( ராமையன்பட்டி சிவனடியார் குழு ), ஐயப்பன், செல்வம், மணிகண்டன் , சுப்பிரமணியன் , ராம்தாஸ் உட்பட பலர் அப்போது உடன் வந்தனர்!
மாநகர காவல் ஆணையாளர் தீபக் தாமோரிடம் நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில்,
கடந்த ஜூலை 23 ஆம் தேதி அன்று கலாட்டா என்ற யூடியூப் சேனலில் முக்கிய பிரச்சினைகளை திசைத் திருப்பப் படுகிறது என்ற தலைப்பில் அரசியல் பிரிவு ஆசிரியர் விக்கிரமன் ஒருங்கிணைப்பில் ஒரு விவாத நிகழ்ச்சி நடைபெற்றது
அப்போது மார்க்சிஸ்ட் கட்சியின் சுந்தரவல்லி என்ற நபர் சைவ சமயத்தின் தலைவராகவும் சைவர்கள் எல்லாம் குல தெய்வமாக போற்றி வழிபட்டு வரக்கூடிய எங்கள் திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்களை இழிவுபடுத்திப் பேசியுள்ளார்
அந்த விவாதத்தில் அந்த நபர் கூறிய தகவல்கள் முற்றிலும் தவறானவை. அதுமட்டுமின்றி உண்மைக்கு புறம்பானவை அந்த நபர் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசி இருப்பதாகவே தோன்றுகிறது.
அந்த நபரின் பேச்சால் நாங்கள் மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளோம். ஆகவே தாங்கள் அந்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு எதிர்வரும் நாட்களில் இவ்வாறான தவறான தகவல்களை பதிவு செய்யும் நபர்களுக்கு பாடம் புகட்ட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த மனுவில் தெரிவித்து இருந்தனர்!