திருஞானசம்பந்தரையும் தேவாரத்தையும் இழிவாகப் பேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி சுந்தரவள்ளி மீது, இந்து மக்கள் கட்சி புகார் அளித்தது. அதன் பேரில், சுந்தரவள்ளி மீது சீர்காழி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேச்சாளர் சுந்தரவள்ளி அண்மையில், “கலாட்டா யூடியூப்’ சேனலில் ஒரு விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போது திருஞானசம்பந்த பெருமான் இயற்றிய திருமுறைகளை கொச்சைப்படுத்தி ஆபாசமாக பேசியிருந்தார்.
திருஞானசம்பந்த பெருமானின் பதிகங்களில் வேற்று சமய பெண்களை கற்பழிக்க வேண்டும் என சொல்லப் பட்டிருப்பதாக சுந்தரவள்ளி பேசியிருந்தார். இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தேவார திருமுறைகளை ஆபாசமாக விமர்சித்து தவறான செய்திகளை உண்மைக்கு புறம்பாக வேண்டுமென்றே திட்டமிட்டு இந்துக்களின் மனங்களை காயப்படுத்துவதோடு சமூக பதட்டத்தை உருவாக்கும் நோக்கில் சுந்தரவள்ளி பேசியிருக்கிறார்.
இந்து மத உணர்வுகளை புண்படுத்தி நம்பிக்கைகளை வழிபாட்டு முறைகளை பக்தி இலக்கியங்களை இழிவுபடுத்தி கேலி செய்யும் வகையில் பேசியுள்ள சுந்தரவள்ளி மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் கடந்த புதன்கிழமை சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் 153 A,298,67 IT ஆகிய பிரிவுகளின் கீழ் சுந்தரவள்ளியின் மீது சீர்காழி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.