கோவையில் பாரத் சேனா நிர்வாகி அருண் கிருஷ்ணன் மீது போடப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தினை நீக்கக் கோரி மனு அளிக்கப் பட்டது.
கோவையில் பாரத் சேனா அமைப்பின் மாநகர மாவட்ட இளைஞரணி செயலாளர் சபரிகிரிசன் தலைமையில், மாநிலச் செயலாளர் வாசு, மாவட்ட பொதுச்செயலாளர் ருத்ரம் முத்து, மாவட்ட அமைப்புச் செயலாளர் மாப்பிள்ளை செந்தில், மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துகிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளர் குமரேசன், ஆகியோர் சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்கள்.
பின்னர் அவர்கள் கூறியபோது… ஈவேரா., சிலைக்கு காவி சாயம் ஊற்றியதாக பாரத் சேனா நிர்வாகி அருண் கிருஷ்ணன் என்பவர், காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இவர் இளம் வயதுடையவர்! இவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த தேசிய பாதுகாப்பு சட்டம் என்பது, வெள்ளையர் காலத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளை அடக்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சட்டம். ஒரு உதாரணத்திற்கு 2010 ஆம் ஆண்டு ஒரு அரசியல் கட்சி பிரமுகர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது, ஆனால் அதனை அன்றைய அரசு சில வாரங்களில் ரத்து செய்தது. இது தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் நன்றாக தெரியும் .
இந்திய தேசிய கொடியை எரித்தவனுக்கு, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு இல்லை. ஆனால் நாத்திகம் பேசிய ஈவேரா, சிலைக்கு காவி சாயம் ஊற்றியவருக்கு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் போடப்பட்டுள்ளது.
ஈவேரா சிலை மீது காவி சாயம் ஊற்றத் தூண்டிய, தமிழ் கடவுள் முருகன் மீது பாடப்பட்ட கந்த சஷ்டி கவசத்தை இழிவாகப் பேசி பதிவிட்ட, கருப்பர் கூட்டம் சுரேந்திரனுக்கு குண்டர் சட்டத்தின் கீழ் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பாரத் சேனா நிர்வாகி அருண் கிருஷ்ணனுக்கு, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது என்பது முழுக்க முழுக்க அரசியல் காரணத்திற்காக நடக்கின்றது என்று நாங்கள் கருதுகிறோம்.
எனவே இவர் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறினார்.