கையில் தேசிய கொடியுடன் பிச்சை எடுத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஒண்ணுபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் அதே பகுதியில் பட்டு சேலை நெசவு வேலை செய்து வருகிறார்.
ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த நிலையில் அமைப்பு சாரா தொழிலாளர் திட்டத்தில் பல்வேறு துறைகளில் முன்பதிவு செய்தவர்களுக்கு அதிலும் நெசவாளர் குடும்பங்களுக்கு அரசு நிவாரணமாக ரூபாய் 2000 அவரவர் வங்கி கணக்கில் செலுத்தியது.
மேலும் அமைப்பு சாரா தொழிலாளர் நலத்துறை திட்டத்தில் முன்கூட்டியே சேராதவர்களுக்கு அரசு வழங்கக்கூடிய 2000 ரூபாய் நிவாரணம் கிடைக்கப்படவில்லை என்ற விரக்தியில் நெசவுத் தொழிலாளி சுரேஷ் அரசிடம் நிவாரணம் கேட்டு ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே மேலாடையின்றி ஒரு கையில் தேசிய கொடியை பிடித்துக்கொண்டும், இன்னொரு கையில் தட்டை ஏந்தி, அரசே நிவாரணம் கொடு, நிவாரணம் கொடு, என்று தனி மனிதனாக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதனை பார்த்த ஆரணி நகர காவல் நிலைய போலீசார் சுரேசை காவல் நிலையத்திற்க்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர் மீது தேசியகொடியை அவமதிப்பு செய்ததாக வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.