வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பன்னீர்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (38), தச்சுத் தொழிலாளி. கடந்த 5-ம் தேதி காலை வழக்கம்போல் வேலைக்குச் சென்ற சரவணன் அன்று இரவு வீடு திரும்பவில்லை. அழிஞ்சிகுப்பம் – கடாம்பூர் சாலை ஓரத்தில் ரத்தக்காயங்களுடன் மறுநாள் சடலமாகக் கிடந்தார். மேல்பட்டி போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்
சந்தேகத்தின்பேரில், பன்னீர்குட்டை காலனியைச் சேர்ந்த மேளம் அடிக்கும் தொழிலாளியான மதன் என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
ஆசைக்கு இடையூறாக இருந்த காரணத்தினால், சரவணனை திட்டமிட்டு தீர்த்துக்கட்டியதை மதன் ஒப்புக்கொண்டார். கொலைசெய்யப்பட்ட சரவணனின் மனைவியுடன் மதன் நட்புறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த சரவணன் மனைவியையும் மதனையும் கண்டித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த மதன் தன் ஆசைக்கு இடையூறாக இருக்கும் சரவணனைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். இதற்கு உடந்தையாக மதனின் மாமன் வெங்கடேசன் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இரண்டு பேரும் சம்பவத்தன்று மது குடித்துவிட்டு உருட்டுக்கட்டையுடன் ஆள்நடமாட்டம் இல்லாதப் பகுதியில் மறைந்திருந்தனர். வேலை முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பிய சரவணனை கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளனர்.
கத்தியால் வெட்டினால் கொலையென கண்டு பிடித்து விடுவார்கள் என்று திட்டமிட்டு உருட்டுக்கட்டையால் தாக்கி சடலத்தை சாலையோரம் வீசியிருக்கிறார்கள். விபத்தில் இறந்ததைப் போன்று ‘செட்டப்’ செய்துவிட்டு தப்பியிருக்கிறார்கள். அவர்கள் நினைத்ததைப் போன்றே போலீஸாரும் விபத்தாக இருக்குமோ என்றுதான் முதலில் கருதியிருக்கிறார்கள். பின்னரே துப்பு கிடைத்து கொலையாளியைப் பிடித்துள்ளனர்.
மதனை கைதுசெய்த போலீஸார், அவருக்கு உடந்தையாக இருந்த மாமன் வெங்கடேசனைத் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.