முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று பிற்பகல், ஒரு தனி நடைமுறை சோதனைக்காக மருத்துவமனை சென்ற போது கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என முடிவுகளில் தெரிய வந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
2012 முதல் 2017 வரை இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜி, கடந்த வாரத்தில் அவருடன் தொடர்பு கொண்ட அனைவரையும் தங்களை முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தி கோவிட் -19 க்கு பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இந்த கொரோனா தொற்று நாட்டில் 22 லட்சத்திற்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது.
“ஒரு தனி நடைமுறைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது, இன்று COVID19 பாசிட்டிவ் என எனக்கு பரிசோதனை முடிவு தெரியவந்தது. கடந்த வாரத்தில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள், தயவுசெய்து தனிமைப்படுத்தி, COVID-19 க்கு பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். ” என்று 84 வயதான முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ட்வீட் செய்துள்ளார்.
பிரணாப் முகர்ஜி ட்வீட்டை வெளியிட்ட சில நிமிடங்களில், அவர் விரைவாக குணமடைய விரும்புவதாக சமூக ஊடகங்களில் பலரும் கருத்துகளை வெளியிட்டனர்.
“தயவுசெய்து கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரைவாக மீண்டு வரவும் உங்களின் நல்ல ஆரோக்கியத்திற்காகவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்” என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் குறிப்பிட்டார்.
“நீங்கள் விரைவாக மீளவும் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையையும் பெற விரும்புகிறேன்” என்று டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அஜய் மேக்கன் ட்வீட் செய்துள்ளார்.
“ஸ்ரீ பிரணாப் முகர்ஜி நலமான வாழ்வுடன் திகழவும் விரைவாக மீள வேண்டும் என்றும் நான் பிரார்த்திக்கிறேன். அவர் விரைவில் வைரஸிலிருந்து மீள்வதில் வெற்றி பெறுவார் என்று நான் நம்புகிறேன். அவருக்கு வலிமையும் ஆரோக்கியமும் பெற வாழ்த்துக்கள்” என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ட்வீட் செய்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா, காங்கிரஸ் தலைவர் சித்தராமையா உட்பட நாட்டின் பல உயர் பதவியில் உள்ள அரசியல்வாதிகள் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என சோதனை செய்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மூன்றாவது நாடு இந்தியா. இன்று காலை, நாடு 20 லட்சத்தை தாண்டி நான்கு நாட்களுக்குப் பிறகு, 22 லட்சம் கொரோனா வைரஸ் கேஸ்களை கடந்துவிட்டது. 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் இறந்துள்ளனர்.