#####ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர்(உயர் சாதிகள் என்று அழைக்கப்படுபவர்கள்) தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பெற்ற மதிப்பெண்களைவிட குறைந்த மதிப்பெண்களையே பெற்றுள்ளனர்.சமூக இடஒதுக்கீடு என்பது திறமைக்கு தரப்படும் நியாயமான அங்கீகாரம் : கனிமொழி.
The reduced cut-off for EWS candidates compared to OBC&SC/ST candidates released by #UPSC for the CSE 2019,clearly proves that candidates availing social reservation aren’t in any way less meritorious. In fact they perform better than forward community candidates : Kanimozhi.###############
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் மேற்கண்ட கருத்தை தெரிவித்துள்ளார். ஆனால் தமிழில் அவர் குறிப்பிடும் போது, குறைந்த மதிப்பெண்கள் என்று குறிப்பிட்டுள்ள அதே நேரத்தில் ஆங்கிலத்தில் cut-off என்று குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதாவது குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்கள் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக குறைந்த மதிப்பெண்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர்(உயர் சாதிகள் என்று அழைக்கப்படுபவர்கள்) என்று குறிப்பிட்டுள்ளார். உயர் சாதி என்பது நம் அரசியலமைப்பு சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பதும், இட ஒதுக்கீடு என்பது சமூக ரீதியாக பின்தங்கியவர்களுக்கானது, சமூக நீதிக்கானது என்பதும் தெளிவு.
ஆனால், இது குறித்து ஆங்கிலத்தில் அவர் குறிப்பிடும் போது, ( In fact they perform better than forward community candidates) என்று குறிப்பிட்டுள்ளார். அப்படியானால் OBC&SC/ST பிரிவினருக்கு சமூக அடிப்படையில் இட ஒதுக்கீடு தேவையில்லை என்று சொல்கிறாரா?
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்றால் உயர் சாதி என்று சட்டத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடாத நிலையில், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உள்நோக்கத்தோடு அப்படி குறிப்பிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மேலும் ஒரு சாதியினரை ‘உயர் சாதி’ என்று குறிப்பிடுவதன் மூலம், சில சாதியினரை ‘கீழ் சாதி’ என்ற பொருள் பட அழைக்கிறாரோ என்ற ஐயத்தை எழுப்புகிறது.
அதோடு, குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்கள் என்பதை குறைந்த மதிப்பெண்கள் என்று தவறாக குறிப்பிட்டு ஓர் சாதியினரை விட மற்றொரு சாதியினர் மேல் என்ற பொருள்பட நேரடியாக குறிப்பிட்டுள்ளது, இரு சாதியினருக்கிடையில் கருத்து வேறுபாட்டை உருவாக்கும் என்ற அடிப்படையில் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மேலும், அவர் குறிப்பிட்டுள்ள சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்கள், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை விட குறைந்து உள்ளது என்பதற்கு காரணம், புதிதாக சட்டமாக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரில் பலர் இன்னும் அந்த சட்டம் குறித்த புரிதல் இல்லாததால், அந்த சட்டத்திற்குட்பட்ட பல்வேறு சான்றுகளை அளித்து தாங்கள் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்று நிரூபித்து அந்தந்த மாநிலங்களில் ஒதுக்கீட்டை பெறுவதற்கான சான்றிதழ்களை பெறவில்லை.
அதனால் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்கள் குறைந்த அளவிலேயே விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களுக்கான 10 விழுக்காடு ஒதுக்கீட்டில் அதிக போட்டி இல்லாத சூழ்நிலையில், குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்கள் குறைவாக இருப்பது இயல்பான மற்றும் சட்டபடி சரியான ஒன்று தான்.
அதிக அளவு விண்ணப்பங்கள் அதிகரிக்கும் நிலையில், தகுதி மதிப்பெண்கள் அதிகரிக்கும் என்பது உலகறிந்த இயல்பான உண்மை. ஆகையால் அடுத்து வரக்கூடிய காலங்களில் குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்கள் அதிகரிக்கும். மேலும் அந்தந்த வருடத்தில் எத்துணை இடங்கள் உள்ளன, அதில் ஒவ்வொரு பிரிவிலும் எத்துணை பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பதை பொறுத்தே குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்கள் நிர்ணையிக்கப்படுகின்றன.
சட்டப்படி நடக்கும் இவற்றையெல்லாம் அறிந்து கொண்டே, கனிமொழி அவர்களும், தி மு க தலைவர் ஸ்டாலின் அவர்களும் சமூக நீதிக்காக குரல் கொடுப்பதாக கூறிக்கொண்டு, சமூக நீதி பயணிக்கும் பாதையை அடைத்து, சமூக நீதி பறிக்கப்படுவதாக சொல்வது சமூக நீதியின் கோட்பாட்டை முற்றிலுமாக பறிக்கும் செயல்.
சாதி ரீதியாக, மொழி ரீதியாக மக்களை பதட்டத்தில் ஆழ்த்தி, உண்மைக்கு புறம்பான தகவல்களை மக்களிடத்தில் பரப்பி குழப்பத்தை விளைவிக்க முயற்சிக்கும் செயலை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். ஆகவே தி மு க , இது போன்ற அரசியல் ஆதாயத்திற்கான செயல்பாடுகளை கைவிட்டு, ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுப்பது தமிழகத்திற்கு பயன்தரும்.
- நாராயணன் திருப்பதி.
செய்தி தொடர்பாளர், பாரதிய ஜனதா கட்சி.