மதுபாட்டில்களை வைத்து வணங்கினால் அரசு அனுமதி தருமோ?! என்று தெரிவித்து, விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி மறுத்துள்ள அரசுக்கு கேள்வி எழுப்பி, மதுபாட்டில்களை சாலையில் வைத்து வணங்க அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி நூதன போராட்டம் மேற்கொண்டுள்ளது.
இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் பிரதீப்குமார் என்ற கொக்கி குமார் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், விநாயகரை வைத்து வழிபட அனுமதி தராத தமிழக அரசு, மதுபாட்டிலை வைத்து வழிபட அனுமதி தருமா? என்று கோரி, ஒரு வில்லங்கமான கோரிக்கை மனுவை சமர்ப்பித்துள்ளார்.
அந்த மனுவில், அரசின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு தமிழகத்தில் அரசு சாராயக் கடையை திறந்து சமூக விலகலைக் காற்றில் பறக்கவிட்டு கொரோனா நோய்த்தொற்றை பரப்பி வருகிறது. ஆனால் கோவில்களை திறக்க விடாமல் பூட்டி வைத்துள்ளது. சர்ச் மசூதி கட்டுப்பாடின்றி திறக்கப்படுகின்றன
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த 35 ஆண்டுகளாக வீதிகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இந்த ஆண்டு கொரோனாவை காரணம் காட்டி விநாயகர் சிலை வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வீதிகளில் சிலை வைப்பதன் மூலமும் அரசுக்கு வருமானம் வரும். ஆனால் அரசு சாராயத்தின் மூலம் வரும் வருமானத்தை மட்டுமே விரும்பினால் வீதிகளில் சாராய பாட்டிலை வைத்து வழிபட அரசு அனுமதி தருமாறு வேண்டுகிறோம்… என்று குறிப்பிடப் பட்டுள்ளது.