ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கேரளாவில் நாள்தோறும் 10 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படலாம் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே கேரளாவில்தான் முதல் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அதனை அடுத்து, கேரளாவில் படிப்படியாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனது. அதனைத் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலம் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தது கேரள அரசு. எனினும் தற்போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டு வருகின்றனர். இதுவரை 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா காணொலி மூலம் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “கேரளாவில் படிப்படியாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்தால், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கும். ஆதலால், அதற்குள் நோய் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். இளைஞர்கள், தன்னார்வலர்கள் முன்வந்து கொரோனா தொற்று பரவலுக்கு எதிராக போராடவேண்டும். மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் கொரோனா வைரஸ் தொற்று பரவலை நிச்சயம் கட்டுப்படுத்தலாம்” என்று கூறியுள்ளார்.