தேசியக்கொடியை அவமதித்து விட்டதாக திமுக., தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த பாபு முருகவேல் என்பவர் இது குறித்த புகாரை பதிவு செய்துள்ளார். அதிமுக., வழக்கறிஞர் அணி மாநில இணைச் செயலாளரான இவர், ஆன்லைனில் இந்தப் புகாரைப் பதிவு செய்துள்ளார். காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கொடி ஏற்றுபவர்கள், தேசியக் கொடியை ஏற்றும் போதும், இறக்கும் போதும் அதற்கு வணக்கம் செலுத்த வேண்டும்.
ஆனால், சுதந்திர தினத்தன்று திமுக.., தலைவர் ஸ்டாலின் அவரது கட்சி அலுவலகமான அறிவாலயத்தில் முதன் முதலாக தேசியக் கொடியை ஏற்றினார். ஆனால் கொடி ஏற்றிய பின்னர் அவர் தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தவில்லை. ஏதோ தன் கட்சிக் கொடியை ஏற்றிச் செல்வது போல, தேசியக் கொடியை அவமதித்துள்ளார். அவர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
ஸ்டாலினின் இந்தக் கொடி விவகாரம், சமூகத் தளங்களில் இரு தினங்களாக பரவலாக அலசப்பட்டு வருகிறது. இது குறித்த வீடியோ வைரலாகி, விமர்சிக்கப் பட்டு வருகிறது.