நியூசிலாந்தை சேர்ந்த 7 வயது சிறுவனின் மூக்கிலிருந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு Lego துண்டு ஒன்று வெளியே வந்துள்ளது.
7 வயது சிறுவன் சமீர் அன்வர், 2 ஆண்டுகளுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருக்கையில், லெகோ (Lego) துண்டு ஒன்றை மூக்கினுள் சொருகியுள்ளார். இதனால் வலி ஏற்பட்டதால் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் பதற்றமடைந்த பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்களால் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. செரிமானப் பாதை வழியாக அந்த துண்டு வெளியேறிவிடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அதன்பிறகு சமீருக்கு வலி ஏதும் ஏற்படவில்லை. சிறுவனும் எப்போதும் போல் குறும்புத்தனமாக உற்சாகமாக இருந்ததால் பெற்றோரும் அந்த சம்பவத்தை மறந்துவிட்டனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் நடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவர்களது வீட்டில் இளஞ்சிவப்பு நிற கப்கேக் ஒன்றை செய்துள்ளனர். அதனை சிறுவன் அருகில் சென்று நுகர்ந்து பார்த்துள்ளார். அப்போது அவருக்கு மூக்கில் திடீரென வலி ஏற்பட ஆரம்பித்துள்ளது.
அதனால் கேக் துண்டு மூக்கிற்குள் சென்றிருக்குமோ என அஞ்சிய சிறுவனின் தாய், மூக்கில் ஊதிவிட்டிருக்கிறார். அப்போது பூஞ்சைகள் படிந்த கருப்பு நிற Lego துண்டு வெளியே வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 2 ஆண்டுகளாக அந்த துண்டு உள்ளேயே இருந்திருக்கும் என்று தாங்கள் எதிர்பார்க்கவில்லை என பெற்றோர் வியப்புடன் கூறியுள்ளனர். இதனை தங்களால் நம்பமுடியவில்லை எனவும் கூறியுள்ளனர்.