கணவர் அதிக காதல் வைத்துள்ளதாகக் கூறி திருமணமான18 மாதங்களிலேயே விவாகரத்து கேட்டுள்ளார் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர்.
உத்தரப்பிரதேசத்தின் சம்பால் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள குடும்பநல நீதிமன்றத்திற்கு சென்று விவாகரத்து கோரியுள்ளார். விவாகரத்திற்கான காரணம் குறித்து அவரிடம் கேட்டபோது வழக்கறிஞர்களிடம் வித்தியாசமான காரணம் ஒன்றை கூறி இருக்கிறார்.
அதாவது, தனக்கு சுமார் 18 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றதாகவும் இதுவரை கணவர் எந்த விஷயத்திற்கும் சண்டையே போட்டதில்லை எனவும் தன்னை மிகவும் அன்புடன் பார்த்துக்கொள்வதாகவும் கூறி இருக்கிறார்.
அந்த பெண்ணின் இந்த பதிலால் குழம்பிய வழக்கறிஞர்கள், அவரிடம் மீண்டும் மீண்டும் கேட்டபோது, தன் கணவருடன் சண்டையிட வேண்டும் எனவும் அதுதான் வாழ்க்கையை நன்றாக கொண்டுசெல்லும் எனவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அந்த பெண்ணின் கணவரிடம் விசாரித்தபோது, மனைவி எது கேட்டாலும் உடனே செய்துவிடுவதாகவும் அவரை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கவேண்டும் என்பதே தனது விருப்பம் எனவும் தெரிவித்துள்ளார். கணவருக்கு இந்த விவாகரத்தில் விருப்பம் இல்லாததால், கணவன் மற்றும் மனைவி என இருவருக்கும் மன நல மருத்துவர்களின் ஆலோசனை வழங்கப்படும் என அப்பகுதி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கணவர் அடிக்கடி சண்டையிடுகிறார் எனவும் துன்புறுத்துகிறார் எனவும் விவாகர்த்து கேட்கும் பெண்கள் இருக்கும் நிலையில், அதிக அன்பு வைத்திருக்கும் காரணத்தால் பெண் ஒருவர் விவாகரத்து கேட்ட சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.