வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டில் உள்ள நகைகள் அனைத்தையும் அணிந்து கொண்டு திருமணம் செய்து கொண்ட பெண் பாதுகாப்பு வேண்டிக் காவல் நிலையத்தில் மனு அளித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் எம்.ஏ, பி.எட், எம்பில் முடித்து அங்குள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார்.
இவரும் அஸ்தம்பட்டியை சேர்ந்த அரசியல் கட்சி ஒன்றின் மாணவரணி செயலாளரான முரளி என்பவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வேறு இனத்தவர் என்பதால் இருவரின் வீட்டிலும் அவர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
தற்போது ஊரடங்கு என்பதால் பள்ளிகள் திறக்கப் படாததால் இருவரும் சந்திக்க முடியாமல் இருந்தது. இதனை பயன்படுத்திக் கொண்ட ஷர்மிளாவின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு பையனை திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்தனர். அதனை அறிந்த ஷர்மிளா வீட்டில் அவரது திருமணத்திற்காக இருந்த நகைகளை அணிந்து கொண்டு அங்கிருந்து தப்பி தன் காதலனிடம் வந்து சேர்ந்தார். பின் இருவரும் அன்னதானப்பட்டியில் உள்ள கோவில் ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு சேலம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.
உடல் முழுவதும் நகைகளுடன் தங்களுக்கு பாதுகாப்பு தரக் கோரி வந்த காதல் ஜோடியைக்கண்டு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
இந்த சம்பவத்தை போலவே கட்டிடதொழிலாளியான ராமதாஸை காதலித்த ப்ரியா என்ற பட்டதாரிப்பெண் அங்குள்ள நரசிம்ம ரெட்டி கோவிலில் திருமணம் செய்து கொண்டு கழுத்தில் மஞ்சள் தாலியுடன் பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையரகத்தில் மனு அளித்தனர்