தேசிய பறவையான மயில் மீது தாம் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பேஸ்புக், டிவிட்டர், யுடியூப், இன்ஸ்டா வாயிலாக பிரதமர் மோடி வெளியிட்டு, வாட்ஸ் அப்பிலும் அதிக அளவில் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ, சுமார் 1.47 நிமிடங்கள் ஓடுகிறது. தில்லி லோக் கல்யாண் மார்க் வீட்டில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
தனது டிவிட்டர் பக்கத்தில், ‘விலைமதிப்பற்ற தருணங்கள்’ என்ற தலைப்பில் ஹிந்தியில் பிரதமர் மோடி ஒரு கவிதையையும் உடன் இணைத்து, இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
பிரதமரது இல்லத்தில் அவரது நண்பர்களாக மயில்கள் உலா வருகின்றன. அந்த மயில்களுக்கு பிரதமர் மோடி உணவளிப்பது, காலையில் உடற்பயிற்சி செய்யும் போது மயில்கள் உலா வருவது, மோடி நடைப் பயிற்சியின் போது பாதையில் மயில் தோகை விரித்து நடனமாடுவது ஆகிய காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
தனது இல்லத்தில் பறவைகள் கூடு கட்டிக் கொள்ளும் வகையில் உள்கட்டமைப்புகளை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.