காதல் திருமணம் செய்த இளைஞரை அடித்து கீழே தள்ளி விட்டு சினிமா பாணியில் பெண்ணுடன் உறவினர்கள் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுமாப்பிள்ளை போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி அடுத்த மங்களம் கிராமத்தை சேர்ந்த சின்னபையன் மகன் அச்சுதன் (31) என்பவர் ஏலகிரி மஞ்சக்கொல்லை புதூர் என்ற கிராமத்தை சேர்ந்த நந்தினி (21) என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இருவரும் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
கோவை ஒன்டிபுதூர் பகுதியில் வசித்து வந்த தம்பதியினரை பெண்ணின் உறவினர்கள் ஜீவேந்திரன், பெண்ணின் தாயார் அனுராதா உட்பட ஏராளமானோர் விரட்டிப் பிடித்து சினிமா பாணியில் கையை கட்டி அழைத்து வந்து நடுவழியில் புதுமாப்பிள்ளை சரமாரியாக தாக்கி விட்டு பெண்ணுடன் மாயமாகியுள்ளனர்.
காதல் திருமணம் செய்த அச்சுதன் இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடுவழியில் புதுமாப்பிள்ளை அடித்துவிட்டு பெண்ணுடன் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.