இ பாஸ் இருப்பதால் தான் யார், யார் எங்கு செல்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது என முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
கடலூரில் கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி., செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்…
தமிழகத்தில் கொரோனாவை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் அதிகளவு பரிசோதனை செய்வதால், தொற்று கட்டுக்குள் உள்ளது. உரிய சிகிச்சை அளிக்கப்படுவதால், கொரோனாவுக்கு ஆளாகும் நபர்கள் அச்சப்பட வேண்டாம்.
கடலூரில் இதுவரை 8 ஆயிரத்திற்கும் அதிகமான காய்ச்சல் முகாம்கள் நடந்துள்ளன. கடலூரில் கொரோனா தடுப்புக்காக 39 நடமாடும் மருத்துவ குழுக்கள் செயல்படுகின்றன. கடலூரில் தான் அதிகளவு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
மாணவர்களின் மன உளைச்சலுக்கு தீர்வு காணும் விதமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்கள் அனைவரும் அரியர் பேப்பரில் பாஸ் என்ற அறிவிப்பு வாக்கு அரசியலுக்கானது இல்லை.
கொரோனா முடிந்த பிறகு நீட் தேர்வை நடத்த வேண்டும் என ஏற்கெனவே பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
இ – பாஸ் இருப்பதால் தான் யார் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. தமிழக அரசின் நடவடிக்கைகளை தொழில்துறையினர் விவசாயிகள் பாராட்டி வருகின்றனர்.
தொழில்துறையினர் சந்திக்கும் பிரச்னை தீர்க்கவே ஒவ்வொரு மாவட்டமாக சென்று அவர்களை சந்தித்து வருகிறேன். அரசு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்களுக்கு ஆட்சியர் கடிதம் எழுதியுள்ளார். அதில், பங்கேற்பதும், பங்கேற்காததும் அவர்களின் விருப்பம் என்றார் அவர்.