தமிழகத்தில் மாவட்டங்களுக்குள் பஸ்கள் இயங்குவதற்கு மாநில அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து 5 மாதங்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கம் தொடங்கியது. ஆயினும், உள்ளூர் மக்கள் மாவட்டங்களுக்குள் மட்டுமே செல்ல முடியும் என்ற நிலையில் அதிகம் இந்த சேவையை பயன்படுத்த முன்வரவில்லை!
தமிழகத்தில் நான்காம் கட்டமாக அறிவிக்கப் பட்ட ஊரடங்கு தளர்வில், மாவட்டத்துக்குள் மட்டும் பஸ்களை இயக்கவும், அதிலும், 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே பஸ்களை இயக்கவும் அரசு அனுமதி அளித்தது. இதை அடுத்து பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, பேட்டரிகள் உள்ளிட்டவை சோதனை செய்யப்பட்டு பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. தொடர்ந்து, பஸ்களை இயக்கும் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.
மாவட்டத்துக்குள் என்பதாலும், 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி என்பதாலும், பஸ்கள் இயங்கத் தொடங்கிய முதல் நாள் என்பதாலும் பயணிகள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து இன்று காலை முதல் மொத்தம் 301 பஸ்கள் (32%) இயக்கப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் 50 சதவீதத்திற்கு கீழ் மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டன. 300 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. திருவாரூர் மாவட்டத்தில் 111 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
மாவட்டத்துக்குள் என்பதால், பயணிகள் கூட்டம் அதிகம் வராது என்று காரணம் கூறி, செலவு அதிகம் பிடிக்கும் என்பதால், தமிழகம் முழுவதும் தனியார் பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை.
முன்னதாக, உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதி இல்லை என்று அறிவித்திருந்த நிலையில், அரசு பேருந்தில் கொடைக்கானல் செல்வதற்கு முகவரியுடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் வேண்டும் என்று கொடைக்கானல் அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் அறிவித்திருந்தார்.