பாரதத்தில் வசித்துக் கொண்டிருந்த எண்ணற்ற மக்கள் பலவித பாவ காரியங்களில் ஈடுபட்டு நரகத்திற்குச் சென்று கொண்டிருந்தார்கள் அப்பொழுது சிவபெருமான் தமது எல்லையற்ற கருணையின் காரணமாக ஸ்ரீருத்ர மந்திரத்தை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து அவர்களை நரக வேதனைகள் இருந்து காப்பாற்றினார் இதனால் எல்லோரும் புனிதநதிகளில் நீராடி ஸ்ரீருத்ர மந்திரத்தினால் சிவபெருமானை வழிபட்டு வந்தனர்.
இதற்கிடையில் இறப்பின் தெய்வமான எமன் கவலைப்படலானார். இப்பொழுதெல்லாம் நரகத்திற்கு ஒருவரும் வருவதில்லையே ஆட்சி செலுத்த பிரஜைகள் என்று யாருமே இல்லாத போது நரகத்தின் அதிபதி என்று மட்டும் நான் சொல்லிக் கொள்வதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது என்று எமன் புலம்ப ஆரம்பித்தார். பிரம்ம தேவரிடம் சென்று தமது குறைகளை கூறினார். எனக்கு பிரஜைகள் யாரும் இல்லாததால் நான் ஓய்வு பெற விரும்புகிறேன் என்றார். அதற்கு பிரம்மா ஸ்ரீருத்ர மந்திரத்தை ஜபம் செய்து உன்னுடைய பிடியில் விழாமல் தப்பித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது உண்மைதான். இருந்தாலும் அச்ரத்தா அவநம்பிக்கை என்ற தூதுவனையும், துர்மேதா
விபரீதமான எண்ணம் என்ற தூதுவனையும் உனக்கு அளிக்கிறேன்.
இவைகளினால் மக்களுக்கு திருமந்திரத்தின் மேலுள்ள விசுவாசம் குறையும் பெரியோர்கள் சொல்வது போல் உண்மையில மந்திரத்திற்கு அவ்வளவு சக்தி இல்லை என்ற மக்கள் மனங்களில் தோன்றும்படி இவை செய்து விடும் இதனால் அவர்கள் மந்திரத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்து சரிவர ஜெபிக்க மாட்டார்கள் இப்படி சரியாக ஜெபிக்காத காரணத்தினால் அவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து விடுபட மாட்டார்கள் என்று பதிலளித்தார்.
மந்திரங்களை ஜெபிக்கும் போது அவற்றை வெறுமையாக சொல்லிக்கொண்டு இருந்தால் மட்டும் போதாது என்பதை இக்கதை நமக்கு அறிவுறுத்துகிறது. மந்திரத்தின் மேல் நம்பிக்கையும் அதற்கேற்ற தகுந்த மனப்பான்மையும் ஜெபிப்பவற்கு மிகவும் அவசியமாகும் இவை இருந்தால் ஜெபத்தின் முழுப்பயனும் தானாகவே ஜெபிப்பவரை வந்தடையும்.