மதுரை விரகனூரைச் சேர்ந்தவர் ராமன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் தனது மனைவி மற்றும் 13 மற்றும் 11 வயதான இரு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்த ராமன் சமூக வலைதளங்களில் மூழ்கி கிடந்துள்ளார். அப்போது அவருக்கும் ஈரோட்டைச் சேர்ந்த செல்வா என்பவருக்கும் இடையே பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டது.
இந்தநிலையில் மதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் செல்வா மீது ஒத்தக்கடை போலீசாரிடம் புகார் அளித்தார். தனது புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதாக, அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில், செல்வா மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக செல்வா மதுரைக்கு வந்தபோது, ராமன் நேரில் பார்த்து இருவரும் பழகிவந்தனர். இதனிடையே இளம்பெண் கொடுத்த புகார் ஜாமீன் எடுக்க, ரூ. 50 ஆயிரம் மற்றும் இரு ஜாமீன்தாரர்கள் ஏற்பாடு செய்துகொடுக்குமாறு ராமனிடம் செல்வா கேட்டுள்ளார்.
இதற்கு அவர் மறுத்தபோது, இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதற்கிடையில் ராமன் பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்த தனது குடும்பத்தினரின் குழு புகைப்படத்தில் இருந்து அவரது இரு பெண் குழந்தைகளின் படங்களை மார்பிங் செய்து, அவதூறு செய்துள்ளார்.
மேலும், ராமனின் புகைப்படத்தையும் தவறாக சித்தரித்து, அவருக்கு எதிரான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பினார். மேலும் இதனை நீக்க வேண்டும் என்றால் ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என செல்வா மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து மதுரை மாவட்ட எஸ்பிக்கு ஆன்லைனில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் செல்வா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.