திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் குறிஞ்சி நகர் பகுதியை சார்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 26). இதே பகுதியை சார்ந்தவர் புவனேஸ்வரி (வயது 19). இவர்கள் இருவருக்கும் கடந்த 55 நாட்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கிருஷ்ணமூர்த்தி, வீட்டிற்கு திரும்பவில்லை. மேலும், உறவினர்கள் அல்லது நண்பர்களின் இல்லத்திற்கு சென்றிருக்கலாம் என்று எண்ணியிருந்த நிலையில், எங்கு தேடியும் அவரை காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.
இந்த விசாரணையில், சீனிவாசபுரம் பகுதியை சார்ந்த மோனிகா என்ற பெண்மணியுடன், கிருஷ்ணமூர்த்தி பழகி வந்தது தெரியவந்துள்ளது.
மேலும், இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், புவனேஸ்வரியுடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது மனைவியை விட்டுவிட்டு காதலியுடன் கிருஷ்ணமூர்த்தி தலைமறைவாகியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் அப்பாவியான பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களின் வற்புறுத்தலின் பேரில் திருமணம் செய்ய முற்பட்டால் பெண்ணிடமாவது மனதை திறந்து பேசி, என்னை பிடிக்கவில்லை என்று கூறுமாறு காலில் விழுந்திருக்க வேண்டும்.
திருமணம் செய்துவிட்டு, புதுமண தம்பதி போல வாழ்ந்துவிட்டு காதலியுடன் தலைமறைவாவது எப்படிப்பட்டது? என்று பெண் வீட்டார் கொந்தளிப்பில் இருக்கின்றனர்.