சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அடுத்த வருடம் ஜனவரி மாதம் தான் விடுதலை செய்யப் படுவார் என்று சிறை நிர்வாகம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் 2017 பிப்ரவரி முதல் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக தீர்ப்பு வந்த போது, நான்கு வருட சிறைத் தண்டனை என்று குறிப்பிடப் பட்டது.
2017 பிப்ரவரி 14ஆம் தேதி தண்டனை உறுதியானது. எனவே 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதிதான் சசிகலா உள்ளிட்டோர் விடுதலை ஆக முடியும். ஆனால் இந்த வழக்குக்காக, அவர்கள் மூவரும் 21 நாட்கள், முன்னமேயே சிறையில் இருந்ததால், அந்த நாட்களையும் கழித்து விட்டு 2021 ஜனவரி இறுதியில் விடுதலை செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. இது குறித்து பல்வேறு ஊகங்களும் வெளியாகின.
இதனிடையே, பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கு பரப்பன அக்ரஹார சிறையின் முதன்மை சிறை கண்காணிப்பாளர் அளித்துள்ள பதிலில் 2021 ஜனவரி 27ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு தண்டனையை நீட்டித்து 2022 பிப்ரவரி 27ஆம் தேதி தான் விடுதலை செய்யப்படுவார் என்றும் சிறையில் இருந்த காலத்தில் பரோலில் வெளியில் சென்றிருந்தால் விடுதலையாகும் தேதி மாறுபடும் என்றும் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
முன்னதாக, நன்னடத்தையின் அடிப்படையில் சிறையிலிருந்து விரைவில் சசிகலா விடுவிக்கப்படுவார் என்று தகவல் பரவியது. அதிலும் குறிப்பாக, இந்த வருடமே அவர் வெளியில் வருவார் என்று, பாஜக.,வைச் சேர்ந்த ஆசீர்வாதம் ஆச்சாரி ஒரு டிவிட்டர் பதிவில் வெளியிட அது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், பெங்களூர் சிறைத்துறை அதிகாரிகள், அதற்கு வாய்ப்பில்லை என்று கூறி வந்தனர். இந்நிலையில் தான், பெங்களூரைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர் சசிகலா விடுதலையாகும் தேதியை அறிந்து கொள்ள ஆர்டிஐ மூலம் மனு அனுப்பிக் கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்துள்ள கர்நாடக சிறை நிர்வாகம் சசிகலா வரும் 2021 ஜனவரி மாதம் 27 – ஆம் தேதி விடுதலை ஆகலாம் என்று அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப் பட வேண்டும். தற்போது கொரோனா காரணமாக தேர்தல் தள்ளிப் போகவும் வாய்ப்பு உண்டு என்றும், அதுவரை ஆளுநர் ஆட்சி வரலாம் என்றும் கூறப் படும் நிலையில், தமிழகத்தில் இப்போதே தேர்தல் அரசியல் சூடுபிடித்து விட்டது.
இப்போது சசிகலாவுக்காக அதிமுக.,வைப் பிளவுபடுத்தி அமமுக., என்று ஒரு கட்சியை நடத்திக் கொண்டு வரும் டிடிவி தினகரன், திமுக.,வுடன் சேர இயலாத நிலையில் உள்ளார். அதிமுக.,வை கைப்பற்றுவதே தங்கள் இலக்கு என்று செயல்பட்டு வரும் சசிகலா – தினகரன் குழுவை அதிமுக.,வினர் சமாளிக்க வேண்டியதிருக்கும். இது திராவிட இயக்கக் கட்சிகளை மும்முனையில் நிறுத்த வைத்திருக்கும்! ஆன்மிக தேசிய அரசியல் என்ற நிலையில் பாஜக., மேற்கொள்ளும் உத்திகள் அப்போது பலன் அளிக்குமா என்பது தெரியும்!