தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் மதுரை விற்பனை குழுவிற்கு உட்பட்ட வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் கடந்த ஒரு மாதமாக பிரதி புதன்கிழமை தோறும் நடைபெற்று வந்தது.
நேற்று (23.09.2020) நடைபெற்ற ஏலத்தில் 4 விவசாயிகளின் 11305 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்திற்கு மதுரை விற்பனைக் குழு செயலாளர்
மெர்சி ஜெயராணி தலைமை தாங்கினார். வெங்கடேஷ் கண்காணிப்பாளர் ஏல நடைமுறையினை பற்றி விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு விளக்கிக் கூறினார்.
வட இந்தியாவில் வரும் நாட்களில் திருவிழா காலமென்பதால் தேங்காய்களுக்கு அதிகத் தேவை என்பதால் இந்த ஏலத்தில் 19 வியாபாரிகள் பங்கு பெற்றனர். இதனால் என்றுமே இல்லாத விலைக்கு வியாபாரிகள் உச்சபட்ச விலையில் ஏலம் எடுத்தனர்.
6035 தேங்காய்கள் கொண்ட குவியல் 15.10 ரூபாய்க்கும், 1380 கொண்ட குவியல் 14.10 ரூபாய்க்கும், 2060 கொண்ட குவியல் ரூபாய் 14.10 க்கும், 1830 கொண்ட குவியல் ரூபாய் 12.50 க்கும் ஏலம் எடுக்கப்பட்டது.
மேலும் 1,62,507 ரூபாய் உடனடியாக வியாபாரிகளிடம் இருந்து பெற்று விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. இதன்மூலம் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர், மேலும் வியாபாரிகளுக்கு தரமான தேங்காய்கள் ஏலத்தில் கிடைத்ததன் மூலம் மகிழ்ச்சி அடைந்தனர்
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை