- திருவில்லிபுத்தூர் அருகே திடீர் அருவியில் குளிக்கச் செல்லும் மக்கள்…..
- யானைகள் நடமாட்டம் இருப்பதால்
வனத்துறை தடை…..
விருதுதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே, மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பிளவக்கல் பெரியாறு அணை.
கடந்த சில நாட்களாக மலைப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. மேலும் சில நாட்களாக பிளவக்கல் பெரியாறு அணைப் பகுதியிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து ஓரளவு உள்ளது. மழையின் காரணமாக பிளவக்கல் பகுதியில் உள்ள பேச்சுக்கனி என்ற பகுதியில் திடீர் அருவி போல தண்ணீர் கொட்டுகிறது.
இதனால் திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள், அருவியில் நீராட கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். பேச்சுக்கனி பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எனவே அந்தப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.
பேச்சுக்கனி அருவியில் குளிக்க தடை விதித்துள்ளனர். ஆனாலும் ஆர்வ மிகுதியில் அருவியில் நீராட, வனத்துறை எச்சரிக்கையை மீறி சிலர் செல்கின்றனர்.
காட்டுப்பகுதிக்குள் அனுமதி இல்லாமல் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை