தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை (1 மில்லியனை) கடந்துள்ளது.
பொது மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தன் ட்விட்டர் கணக்கை பயன்படுத்தி வருகிறார். குறிப்பாக கொரோனா காலத்தில், ட்விட்டரில் பொதுமக்கள் விடுக்கும் கோரிக்கை மீது, அதிகாரிகள் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண்கிறார். இதனால் பொதுமக்கள் பலரும் தங்களது கோரிக்கைகளை ட்விட்டர் மூலமாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றனர்.
முதலமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவாகி வரும் கோரிக்கையை ஏற்று, ஆபத்தான நிலையில் இருப்பவர்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைளை முதலமைச்சர் உடனுக்குடன் மேற்கொண்டு வருகிறார்.
அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களையும், செயல்பாடுகளையும் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் பதிவிட்டு வருகிறார். இதனால், அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி தற்போது, முதலமைச்சரின் ட்விட்டர் கணக்கில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது.