- சதுரகிரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு மருத்துவ பரிசோதனை…..
- உடல்நலக் குறைபாடுள்ளவர்கள் செல்ல வேண்டாம் என வலியுறுத்தல்…..
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள சதுரகிரிமலைக்கு, புரட்டாசி அமாவாசை பூஜைகளுக்காக, நேற்று பிரதோஷ நாளிலிருந்து பக்தர்கள் மலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
பிரதோஷ நாளையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை மேல் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தனர். இன்றும் காலையிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்றுகொண்டு இருக்கின்றனர்.
நேற்று கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (42) என்பவர், மலையில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு, திரும்பி வரும்போது பசுத்தடம் பகுதியில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். இதனால் வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் மலைக்குச் செல்லும் பக்தர்களிடம், உடல்நலம் சரியில்லாதவர்கள் மலைக்குச் செல்ல வேண்டாம் என்று வலியுறுத்துகின்றனர்.
மேலும் அடிவாரப்பகுதியில் உள்ள மருத்துவக்குழுவிடம், தேவையுள்ளவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் அனைவரும் உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்பே மலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை