ஹைதராபாதில் பெரும் மழையினால் வெள்ளம் ஏற்பட்டு… அதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் பேசச் சென்ற துணை சபாநாயகர் பத்மாராவு பொறுமை இழந்து எரிந்து விழுந்தார்.
“ஓட்டுப் போடுவதற்கு மட்டும் நாங்கள் வேண்டும். ஆனால் கஷ்டத்தில் இருக்கும் போது உதவி புரிய வர மாட்டீர்களா? மூன்று நாட்களாக தண்ணீரிலேயே வாழ்கிறோம். இப்போதுதான் வருகிறீர்களா?” என்று நேரடியாக கேள்வி கேட்ட பெண்களிடம் அவர் எதிர்க் கேள்வி கேட்டார்.
“சும்மா கத்தாதம்மா… நீ ஏதாவது எனக்கு ஓட்டுப்போட்டாயா, என்ன?” என்று சீரியஸாக பதில் கூறினார்.
சனிக்கிழமை ஐதராபாத்தில் தார்னாகா டிவிஷன் லாலாப் பேட்டையில் டிப்யூடி ஸ்பீக்கர் பத்மாராவு கௌட் சுற்றுப்பயணம் செய்தார். உள்ளூர் கார்ப்பரேடர் சரஸ்வதி, ஜிஹெச்எம்சி அதிகாரிகளோடு சேர்ந்து லாலாப்பேட்ட, சந்திரபாபு நாயுடுநகர் மற்றும் பிற இடங்களுக்குச் சென்றார். ஆனால் ஒவ்வொரு இடத்திலும் பெண்கள் அவரை நேரடியாக கேள்வி கேட்டார்கள்.
” வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து… சாப்பிடுவதற்கு உணவில்லாத சூழ்நிலையில் நாங்களெல்லாம் இவ்வளவு சிரமத்தில் இருக்கையில் இந்தப் பக்கம் நீங்கள் திரும்பி கூட பார்க்கவில்லை. நிலைமை சாதாரண நிலைக்கு வந்த பிறகு இப்போதா வருவது?” என்று சிலர் கேள்வி எழுப்பினர்.
” மழை பெய்தால் மட்டும்தான் இந்த பக்கம் திரும்பி பார்ப்பீர்களா, சார்? இது எப்பவும் இருக்கிறதுதானே…! இதைவிட வேறென்ன எதிர்பார்ப்பது உங்களிடம்?” என்று மேலும் சிலர் கேட்டார்கள்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் பத்மராவு கௌட், “லாரியில் அரிசி எடுத்து வந்திருக்கிறோம். எல்லாருக்கும் வினியோகிக்கப் போகிறோம்” என்று விவரிக்க முயற்சி செய்தார்.
” நீங்கள் கொடுக்கப்போகும் அரிசிக்காக காத்துக் கொண்டிருக்க சொல்கிறீர்களா? மூன்று நாட்களாக எங்களைப் பற்றி கவலைப்படாமல் இப்பொழுது லாரி வருகிறது… அரிசி வருகிறது என்று கூறுகிறீர்களே… இன்னும் வந்து கொண்டே இருக்கிறதா? அல்லது வந்துவிட்டதா?” என்று பெண்கள் எரிந்து விழுந்தார்கள்.
அதனால் பத்மாராவு கௌட் பலரையும் விசாரிக்காமலேயே சென்றுவிட்டார். ஒரு முதியவர் மழையில் இடிந்து விழுந்த தன் வீட்டின் சுற்றுச்சுவரை காட்டுவதற்காக எதிர்பார்த்து நின்று இருந்தார். அவரை கண்டு கொள்ளாமல் பத்மாராவு, கார்ப்பரேட் அதிகாரிகளோடு சென்று விட்டார்.
” என் கஷ்டங்களை கூறிக் கொள்ளலாம் என்று பார்த்தால் திரும்பி கூட பார்க்காமல் போகிறாரே…! பின் எதற்காக வந்தாராம்? எதற்காக போனாராம்?” என்று அந்த பெரியவர் ஆத்திரம் அடைந்தார்.