நிவார் புயல் காரணமாக நேற்று இரவு முதலே சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனிடையே நிவார் புயல் வேகமெடுத்து வருகிறது.
சென்னைக்கு கிழக்கே சுமார் 450 கி.மீ. தொலைவில் உள்ள நிவர் புயல் வேகம் அதிகரித்து நகர்ந்து வருகிறது. புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மேலும் வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. முன்னதாக, நிவர் புயல் உருவானதையொட்டி புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 7-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயல், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதன்கிழமை இன்று பிற்பகல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் மழை பெய்து கொண்டிருக்கிறது. கடல் சீற்றமாக காணப்படுகிறது
நிவார் புயல் கரையை கடக்கும் வரை கல்பாக்கம் அணு உலை ஊழியர்கள், குடும்பத்தினர் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது! மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே புயல் கரையை கடக்க உள்ள நிலையில் கல்பாக்கம் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப் பட்டிருக்கிறது.
புயல் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் சைதாப்பேட்டை, கிண்டி, கோடம்பாக்கம், தாம்பரம், கிண்டி, நுங்கம்பாக்கம், அம்பத்தூர், ஆவடி, மீஞ்சூர், திருவொற்றியூர், துரைப்பாக்கம், சேப்பாக்கம், திருவான்மியூர், செம்பரம்பாக்கம், வண்டலூர், அனகாபுத்தூர், அசோக்நகர், நந்தனம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, மேற்கு மாம்பலம் மற்றும் எழும்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தின் சில இடங்களிலும் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னை அசோக் நகரில் கனமழையால் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வங்கக் கடலில் நிலை கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது புயலாக வலுப்பெறுகிறது. இதன் வேகம் மணிக்கு 15 கி.மீ முதல் 4 ஆக குறைந்திருந்தது பின்னர் 5 கி.மீ., ஆக அதிகரித்து, சென்னையை நோக்கி நெருங்கி வருகிறது.
நிவார் புயல் காரணமாக தமிழகத்தின் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களுக்கு இடையேயும், உள்ளேயும் மறு உத்தரவு வரும் வரை பஸ்கள் சேவை இயக்கப்படாது.