வங்க கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் வேகம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை அடுத்து, நாளை மாலை புயல் கரையைக் கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவர் புயலின் வேகம் குறைந்துள்ளது! நாளை மாலை அதி தீவிரப் புயலாக கரையை கடக்கும் ! நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும், மேலும் வருகின்ற 27ஆம் தேதி வரை மழை தொடரும்… என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை புயலாக உருவான நிவர் கரையை நோக்கி மணிக்கு 5 கி.மீ என்ற வேகத்தில் முன்னேறி வந்தது. இதனால் நாளை பிற்பகலில் புயல் கரையை கடக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த 3 மணி நேரமாக நிவர் புயல் நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் புயல் கரையை கடக்கும் நேரத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் நாளை அரசு பொதுவிடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதனிடையே நிவர் புயல் காரணமாக, நாளை அரசு பொது விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக கனமழை பெய்யும் என்பதால் நாளை அரசு பொது விடுமுறை என்று தெரிவிக்கப் பட்டுளது.
தமிழகம் முழுவதும் நாளை அரசு ஊழியர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணிகளில் உள்ள அரசு அலுவலர்கள் மட்டும் நாளை பணிபுரிவார்கள்! மழைப்பொழிவை பொறுத்தே செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பது குறித்த முடிவு செய்யப் படும்.
மழை அதிகமாக பெய்தால் உபரி நீரை வெளியேற்ற செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து தான் ஆக வேண்டும். புயலால் சாயும் மரங்களை அப்புறப்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை மீட்கவும், உதவவும் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. நிவாரண முகாம்களுக்காக கல்வி நிலையங்கள், திருமணக் கூடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.