- திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
- திருக்கார்த்திகையை முன்னிட்டு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது .
- மலை உச்சியில் 6 அடி உயர கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கார்த்திகை தீபத் திருவிழாவின் 10ஆம் நாளான இன்று அதிகாலை 03.30 மணி அளவில் ஸ்வாமி சன்னதி மூல கருவறை முன் 5 மடக்குகளில் பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின் அதிகாலை 4 மணிக்கு நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், ஆகிய பஞ்ச பூதங்களும் சிவபெருமான் வடிவே எனக் காட்டும், ஏகன், அனேகன் என்பதை விளக்கும் வகையில், சுவாமி சந்நிதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இதை அடுத்து இன்று மாலை பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், அண்ணாமலையார் சமேத உண்ணாமுலையம்மை, பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தங்கக் கொடி மரத்தின் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த பின் தீப தரிசன மண்டபத்தில் ஒன்றாக அமர்ந்தனர். அர்த்தநாரீஸ்வரர் தங்கக் கொடி மரம் முன் எழுந்தருளி நடனமாடிபடி அன்பர்களுக்குக் காட்சியளித்தார்.
காலை சுவாமி சந்நிதியில் ஏற்றப்பட்ட ஐந்து அகல் விளக்குகளையும் உடன் கொண்டு வந்து கொடி மரத்தின் முன்பாக உள்ள அகண்டத்தில் ஒன்று சேர்த்தனர். பின் பஞ்ச பூதங்களைக் குறிக்கும் விதத்தில் 5 தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டன. தொடர்ந்து, மலை உச்சியில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப் பட்டது
- செய்தி: எஸ்.ஆர்.வி. பாலாஜி, திருவண்ணாமலை.