Home அடடே... அப்படியா? “மன்னார்குடி மாஃபியா, சாக்கடை நீர்…”; சசிகலா குறித்த எஸ்.குருமூர்த்தி விமர்சனத்துக்கு டிடிவி தினகரன் பதில்!

“மன்னார்குடி மாஃபியா, சாக்கடை நீர்…”; சசிகலா குறித்த எஸ்.குருமூர்த்தி விமர்சனத்துக்கு டிடிவி தினகரன் பதில்!

ttv sasikala
ttv sasikala

மன்னார்குடி மாஃபியா, சாக்கடை நீர், கங்கை நீர் என்று துக்ளக் இதழாசிரியர் எஸ்.குருமூர்த்தி விமர்சனம் செய்திருப்பதற்கு தனது பதில் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன்.

அவர் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது…

ஒரு சிலர் தங்களைத் தாங்களே அதிமேதாவிகளாக, பவித்திரர்களாக பாவித்துக்கொண்டு பதற்றத்தில் பிதற்றுவதற்கெல்லாம் பதில் சொல்லி நமது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பலரும் நமது கருத்தைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதால் எனது கருத்தை இங்கே பதிவிடுகிறேன்.

ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியல் விமர்சகராக, துக்ளக் இதழின் நிறுவன ஆசிரியராக இருந்த திரு. சோ அவர்கள், தனது இறுதி மூச்சு வரை கடுமையான விமர்சனங்களைக் கூட நகைச்சுவை உணர்வோடும் நாகரிக எல்லையைத் தாண்டாமலும் செய்த பெருமைக்குரியவர்.

அவரைத் தனது ஆசானாகச் சொல்லிக்கொண்டு, துக்ளக் ஆசிரியராக இருக்கும் திரு. குருமூர்த்தி, கடந்த சில ஆண்டுகளாகப் பயன்படுத்தும் வார்த்தைகள் அவரது நிஜமான தரத்தைக் காட்டுவதாகவும், சோ அவர்களின் பெயருக்கே களங்கம் விளைவிப்பதாகவும் இருந்து வருகிறது.

கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது? மாஃபியா யார்? என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது தமிழ்நாட்டு மக்கள்தானே தவிர, கங்கை புத்திரன் பீஷ்மராகவே தன்னை பாவித்துக்கொள்ளும் குருமூர்த்தி போன்ற மனநிலை கொண்டவர்கள் அல்ல !

துக்ளக் விழாவில், அதன் ஆசிரியராக இருப்பவர் கையூட்டுப் பெற்றுக்கொண்டு பேசியதாக ஜெயக்குமார் போன்றவர்களெல்லாம் விமர்சிக்கும் அளவுக்கு குருமூர்த்தியின் தரம் தாழ்ந்து போனது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது…. – என்று டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னதாக, சசிகலா குறித்து எஸ் குருமூர்த்தி பேசியது சர்ச்சை ஆகியுள்ள நிலையில் அவர் தனது பேச்சு குறித்து டுவிட்டர் பதிவுகளில் நேற்று விளக்கம் அளித்திருந்தார். அதில் அமமுக.,வை இன்னமும் மன்னார்குடி மாபியாவாகத்தான் கருதுகிறேன். பாஜக அதிமுக கூட்டணியில் அமமுக இடம் பெற்றாலும் அவர்களை அப்படியே கருதுவேன். மன்னார்குடி மாபியா மீண்டும் அதிமுகவுக்கு வந்தால் திமுக போல், அதிமுகவும் ஒரு குடும்ப கட்சி ஆகிவிடும் என்று குறிப்பிட்டிருந்தார்


மேலும் வீடு பற்றி எரிகிறது; கங்கை நீருக்காக நாம் காத்துக் கொண்டிருக்க முடியாது! நாம் சாக்கடை நீரையும் வாரி வீசுவோம் என்று அருண்ஷோரி ஒரு முறை கூறியிருந்தார். அவர் சொன்னது போல் திமுகவை வீழ்த்த சசிகலாவாக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் கங்கை நீருக்கு காத்திருக்காமல் எல்லா நீரையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது என்று எஸ்.குருமூர்த்தி தெரிவித்திருந்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version