நாடாளுமன்ற மாநிலங்களவையில் பிரதமர் மோதி புதிதாக இரண்டு வார்த்தைகளை தேசத்துக்கு அறிமுகப் படுத்தினார். இவை குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப் பட்டன. பலரும் தங்களது ஆச்சரியத்தை இந்த வார்த்தைகளைச் சொல்லி வெளிப்படுத்தினர். பிரதமர் பேசியவற்றில் இருந்து…
மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே, நாமனைவரும் சில சொற்களை நன்றாக அறிவோம். தொழிலாளி, புத்திஜீவி, இவையெல்லாம் நமக்கு பரிச்சியமானவை.
சில காலமாகவே இந்த தேசத்திலே ஒரு விஷயத்தை நான் கவனித்து வருகிறேன், ஒரு புதிய கும்பல் ஏற்பட்டிருக்கிறது. ஒரு புதிய உறவு உருவாகியிருக்கிறது. போராட்டத்தால் வயிறு வளர்ப்பவர்கள். இந்தக் கும்பலை நீங்கள் கவனித்தால், வக்கீல்கள் போராட்டம் என்றால், இவர்கள் அங்கேயும் இருப்பார்கள். மாணவர்கள் போராட்டம் என்றால் அங்கேயும் இருப்பார்கள். தொழிலாளர்கள் போராட்டம் என்றால் அங்கேயும் இருப்பார்கள்.
சில சமயம் திரைக்குப் பின்னால் சில சமயம் திரைக்கு முன்னால். இது ஒரு பெரிய கும்பல். இவர்கள் தான், போராட்டத்தால் வயிறு வளர்ப்பவர்கள். இவர்களால் போராட்டம் இல்லாமல் வாழ முடியாது. போராட்டத்தை உருவாக்க வழி வகைகளைத் தேடிக்கொண்டே இருப்பார்கள். நாம் இவர்களை எல்லாம் அடையாளம் காண வேண்டும்.
இவர்கள் அனைத்து இடங்களையும் சென்றடைந்து, உடனடியாக கொள்கைரீதியான நிலைப்பாட்டை எடுப்பார்கள், மக்கள் கண்களைக் கட்டுவார்கள் அவர்களை திசை திருப்புவார்கள் வெருட்டுவார்கள். நாடு இந்தப் புரட்டுப் போராளிகளிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் மிக கவனமாக, இருக்க வேண்டும். இது தான் அவர்களுடைய பலம்…
என்ன செய்வார்கள்? இவர்களால் சுயமாகச் செய்ய முடியாது. யாராவது ஏற்பாடு செய்தால் அதில் கலந்து கொள்ளுவார்கள். எத்தனை நாட்கள் நடக்குமோ அத்தனை நாட்கள் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டு கொள்வது மிகவும் அவசியமானது.
இந்த, போலிப் போராளிகள் அனைவரும் ஒட்டுண்ணிகள். இங்கே அமர்ந்திருக்கும் அனைவருக்கும் நான் சொல்வது நன்கு புரியும், நீங்கள் எங்கே எல்லாம் ஆட்சி செய்கிறீர்களோ, அங்கே எல்லாம் இப்படிப்பட்ட ஒட்டுண்ணுகள், (சிரிப்பு) போராட்டக்காரர்கள் மத்தியிலே இருப்பதைக் காணலாம்.
அந்த வகையிலே, இதே போல, ஒரு புதிய, விஷயத்தை நான் பார்க்கிறேன். தேசம் முன்னேறி வருகிறது… நாம் FDI பற்றிப் பேசுகிறோம். அந்நிய நேரடி முதலீடு. ஆனால் என்னால் இப்போது ஒரு புதிய அந்நிய நேரடி முதலீடு களத்தில் இருக்கிறது. இந்த புதிய FDIயை தேசத்தைக் காப்பாற்றியாக வேண்டும்….
FDI தேவை தான் அந்நிய நேரடி முதலீடு. ஆனால் இப்போது காணக் கிடைக்கின்ற புதிய FDI, இந்தப் புதிய FDIயிடமிருந்து நாம் தற்காத்துக் கொள்ள வேண்டும்.
இந்தப் புதிய FDIயின் பெயர், Foreign Destructive Ideology. அந்நிய நாசகாரக் கொள்கை. அந்த வகையிலே, இந்த FDIயிடமிருந்து, தேசத்தைக் காப்பாற்ற, நாம் மேலும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது அவசியம்.
- தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்