தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் போனில் பேசி, போக்குவரத்து தொழிலாளர் பிரச்னையை தீர்த்து வைக்குமாறு ஸ்டாலின் கூறியதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில், திமுக ஓர் அறிக்கையை வெளியிட்டது. அது குறித்து ஸ்டாலின் பின்னர் பேசினார். அவர்கள் இருவரும் அப்படி என்ன பேசினார்கள்?
போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக ஸ்டாலின், நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை, பேச்சுவார்த்தை மூலம் உடனே முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு மு.க.ஸ்டாலின் தம்மிடம் கேட்டுக்கொண்டதாக கூறியுள்ளார். அப்போது, போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தேன் என்றும், ஊதியம் குறித்த கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக்கொண்ட நிலையில் தொழிலாளர்கள் சிலர் வேலைநிறுத்தத்தை தொடர்வது தவறானது என தாம் ஸ்டாலினிடம் கூறியதாகவும் எடப்பாடி தெரிவித்துள்ளார். மேலும், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தலைமையில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை இதுவரை 23 முறை நடைபெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு கடந்த 2013ஆம் ஆண்டு வழங்கிய 5.5 % ஊதிய உயர்வுடன், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 2.44% ஊதிய உயர்வை சேர்த்துப் பார்த்தால், அவர்கள் கேட்ட 2.57% க்கு நிகராக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக 2,684 முதல், 11,361 ரூபாய் வரை ஊதிய உயர்வு வழங்கப்பட இருப்பதாகவும், இந்த ஊதிய உயர்வு இதுவரை வழங்கப்பட்டதைவிட அதிகமானது என்ற விவரத்தையும் மு.க.ஸ்டாலினிடம் தாம் தெரிவித்ததாக முதலமைச்சர் கூறியுள்ளார்.
எனவே தொழிற்சங்கங்களிடம் இதைத் தெரிவித்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதபடி அவர்களைப் பணிக்குத் திரும்புமாறு அறிவுறுத்த வேண்டும் என ஸ்டாலினிடம் தாம் கூறியதாக எடப்பாடி தெரிவித்துள்ளார்.
இப்படி எல்லாம் இருக்க, தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது தொடர்பான விவரம் எதையும் தெரிவிக்கவில்லை என திமுக ஒருதலைப் பட்சமாக ஓர் அறிக்கை வெளியிட்டிருப்பதாக முதல்வர் வருத்தப் பட்டுள்ளார்.
இந்நிலையில், முதலமைச்சரின் கருத்து உண்மையை மூடிமறைக்கும் வகையில் இருப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலினிடம், முதலமைச்சர் அறிக்கை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. தொலைபேசியில் பேசியபோது முதலமைச்சரே நேரடியாக தலையிட்டு போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு காண தாம் வலியுறுத்தியதாகவும், ஆனால், அந்த உண்மையை மறைத்து முதலமைச்சர் கருத்து கூறியிருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.