புதுச்சேரியில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் வழிந்து ஓடிக் கொண்டிருக்கிறது. புதுச்சேரி பகுதியில் உள்ள ஓடைகளிலும் மழை நீர் வெள்ளம் போல் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் பகுதி சண்முகபுரம் வடக்கு தெருவை சேர்ந்த சசி குமார் என்பவரின் மனைவி ரசியா பேகம் என்பவர் மழை நீர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.
ரசியா பேகம் இன்று காலை மேட்டுப்பாளையம் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு உள்ளார்.
அப்போது மீன் மார்க்கெட் அருகே உள்ள வல்லவாரி ஓடையில் இருந்து அதிக அளவு நீர் வந்து கொண்டிருந்தது.
அப்போது, அந்த ஓடையில் அவரது வாகனம் சிக்கி கொள்ளவே ,அவர் வாகனத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாத அவர் மழைநீரில் அடித்து செல்லப்பட்டார். சுமார் 3 மணி நேரம் அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுப்பட்டு உள்ளனர்.
இதனையடுத்து தீயணைப்புத்துறை போலீசாரும் அந்த பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது அவரின் இருசக்கர வாகனம் மட்டும் கிடைத்துள்ளது. அந்த பெண் குறித்து எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. போலீசார் பொதுமக்கள் உள்ளிட்டோர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.