திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம்-ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் செல்லும் சாலையில் காவல்துறையினர் சோதனை சாவடி அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அந்த வழியாக வந்த 2 இளைஞர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களிடம் சோதனை செய்துள்ளனர்.
அப்போது அவர்களின் இடுப்பு பகுதியில் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர்கள் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் வசித்து வரும் முத்துராஜ் என்பதும், மற்றொருவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு பகுதியில் வசித்து வரும் காஜாமைதீன் என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இவர்கள் தேனி, கம்பம் பள்ளத்தாக்கு போன்ற பகுதிகளிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு அதனை விற்பனை செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த இளைஞர்களை கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த 1 1/4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.