திமுக.,வினரைப் போல் இடுப்புக் கிள்ளுதல், மணல் திருட்டு இவை போன்றவையா என் மீதான வழக்குகள்? என்று அரவக்குறிச்சி பாஜக., வேட்பாளர் அண்ணாமலை அதிரடியாகக் கேள்வி எழுப்பினார்.
என் மீதான வழக்கு என்று பார்த்தால் தேர்தல் பணிமனை பிரச்னை உள்ளிட்டவைதான்! ஆனால் திமுக.,வினர் போல் இடுப்புக் கிள்ளியது, மணல் திருடியது இவை போன்று இல்லை என்று குறிப்பிட்ட அண்ணாமலை, பள்ளப்பட்டியில் உள்ள இஸ்லாமியர்கள், இந்தியாவில்தான் இருக்கின்றார்கள்… அவர்களிடம் வாக்குகள் கேட்பேன் என்றும், இஸ்லாமிய சகோதரிகள் எனக்கு முழு ஆதரவு கொடுப்பார்கள் என்றும் நம்பிக்கையுடன் கூறினார்.
என் மீதான வழக்கு என்றால் அதிகமாக கூட்டம் சேர்த்தது என்பதுதான். நான் யாரையும் கடத்தவில்லை, பிறரை போல வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்யவில்லை! அதே நேரத்தில், நான் சட்டமன்ற உறுப்பினரானால் இந்தத் தொகுதியில் அதிக அளவில் வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு ஏற்படுத்தித் தருவேன் என்று அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று கோரி, சென்னையிலிருந்து வந்திருந்த திமுக வழக்கறிஞர்கள் புகார் கூறினார்கள். மேலும், அண்ணாமலை மீது வழக்குகள் இருப்பதாகவும் ஆகவே மனுவினைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், பரிசீலனைக்குப் பின் அண்ணாமலையின் மனு ஏற்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புகளூர், புஞ்சைப்புகளூர், செம்மடாபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தில் மேற்கொண்ட அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, என் மீது மேல் வழக்கு இருப்பதாக திமுக வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு சொன்னதால் வேட்பு மனு நிறுத்தி வைக்கப் பட்டதாக வெளியான தகவல் பொய்யானது. படிக்காமல் வந்த திமுக., அரசியல்வாதிகளைக் கொண்டு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு இதுவே உதாரணம். திமுக வேட்பாளர் அரவக்குறிச்சி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவுவார்… என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து, பள்ளப்பட்டி இஸ்லாமியர்கள் பாஜக., வை எதிர்க்கின்றார்களே என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு, பாஜக பள்ளபட்டி பகுதிக்குள்ளும் போகும்! பள்ளபட்டி இந்தியாவிற்குள் இருக்கும் ஒரு பகுதிதான். ஜமாத் பாஜக.,வை கட்டுப்படுத்தாது. ஜமாத் என்ற பெயரில் 8 பேர் ஜமாத்தில் உட்காந்து கொண்டு அறிக்கை விடுவது ஒன்றும் பாஜக.,வை கட்டுப்படுத்தாது. என்றால் அவர்கள் திமுக.,வைச் சார்ந்தவர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
2014ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய மக்களுக்கு எந்த கட்சி அதிக நிதிகளை ஒதுக்கியது என்று தெரியுமா, காங்கிரஸ் கட்சியை விட, பாஜக தான் அதிக நிதி ஒதுக்கியுள்ளது. ஜமாத்தை திமுக பார்ட்டி என மாற்றிக் கொள்ளுங்கள் என்றார்.
பொது மேடையில் குரான் தெரிந்த ஜமாத் தலைவர்கள் வாக்குவாதம் செய்யட்டும். எனக்கும் குரான் தெரியும், குரானை மதிக்கின்றவன். அண்ணாமலையை பார்க்க மக்கள் வருகிறார்கள். ஜமாத் யாரும் எங்களை தடுக்க முடியாது. ஓட்டுக்காக மக்களிடம் பயத்தை உண்டாக்கி வைத்திருக்கிறார்கள். இஸ்லாமிய சகோதரிகள் என்னை நம்புகிறார்கள்… என்றார் அண்ணாமலை.
மேலும், பெட்ரோல், டீசல் விலை குறைய ஆரம்பித்து விட்டது. திமுக இப்பவே மணல் திருடப் போறேன்னு ஆரம்பிச்சுட்டாங்க, அதனை தொடர்ந்து இடுப்பை கிள்ளுவார்கள், திருடுவார்கள், கட்டப்பஞ்சயத்து செய்வார்கள் என்றார் அண்ணாமலை.