மதுரை : மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வி. ஆர்.லெனின் காணொளி மூலம் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ரயில் போக்குவரத்து நிறுத்தப்படும், அதிக அளவில் புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில் நிலையங்களில் கூடுகிறார்கள் போன்ற வதந்திகள் பழைய வீடியோக்களை உபயோகபடுத்தி சமூகவலைதளங்களில் பரப்பப்படுகிறது. அது தவறான தகவல்.
ரயில்கள் வழக்கம்போல இயக்கப்படுகின்றன. சூழ்நிலைக்கேற்ப ரயில் சேவைகள் கூடுதலாக்கப்படும். புலம்பெயர் தொழிலாளர்கள் அதிக அளவில் ரயில் நிலையங்களில் கூடவில்லை என்றார்.
ரயில் நிலையங்களில் கூட்டத்தை தவிர்க்க மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூபாய் 50 ஆக அதிகரிக்கப் பட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, கோவில்பட்டி, தென்காசி, செங்கோட்டை, ராஜபாளையம், மானாமதுரை மற்றும் ராமேஸ்வரம் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு வெப்பநிலையை தானாக பதிவு செய்யும் கேமராக்கள் மற்றும் பயணச்சீட்டுகளை தொடாமல் ஸ்கேன் செய்து சோதிக்கும் முறையும் பயன்பாட்டில் உள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான அடிக்கொரு முறை கை கழுவுதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்றவை குறித்து சுவரொட்டி மற்றும் மின்னணு விளம்பர பலகைகள் மூலமாக ரயில் நிலையங்களில் விளம்பரப் படுத்தப்படுகிறது.
ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.