கோவையில், 1.8 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளை கைப்பற்றிய கேரள போலீசார், அதை பதுக்கி வைத்திருந்த இருவரை கைது செய்தனர்.
கேரளா, கொச்சி அருகேயுள்ள உதயம் பேரூரில், கடந்த, 28ல், 95 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு கள்ளநோட்டு வைத்திருந்த பிரியன் லால் என்பவர் போலீசாரிடம் பிடிபட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.ஐ., சுனேக் தலைமையில், ஐந்து போலீசார், நேற்று இரவு கரும்புக்கடை, வள்ளல் நகருக்கு வந்தனர்.
அங்கு அஷ்ரப் அலி, 29 என்பவரின் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த அஷ்ரப் அலியிடமிருந்து, நான்கு, 2,000 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செயயப்பட்டது. தொடர்ந்து அஷ்ரப் அலியுடன், தெற்கு உக்கடம், அல்- அமீன் காலனியிலுள்ள பானி பூரி வியாபாரி சையது சுல்தான், 32 வீட்டுக்கு சென்றனர்.
அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த, 1.8 கோடி ரூபாய் மதிப்பிலான, 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் சிக்கின. தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், கேரளா அழைத்துச் சென்றனர்.
கேரள போலீசாரின் அதிரடி ரெய்டும், கத்தை கத்தையாக கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதும், அப்பகுதியில் நேற்றிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.