ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு செல்ல சென்னை தாம்பரம், பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் பயணிகள் குவிந்தனர். போதிய பேருந்து கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பேருந்துகள் இயக்கப்படுவது இல்லை.
இதனால், இரவு நேர பேருந்துகள் ரத்து செய்யப்பட்டு, பகலில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகள் வசதிக்காக பகலில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (இன்று) ஊரடங்கு என்பதால் சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் நேற்று ஏராளமானோர் குவிந்தனர்.
பலர் சொந்த ஊர் செல்ல காலை முதலே பேருந்து நிலையத்தில் திரண்டனர். ஆனால், பேருந்துகள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
பேருந்து கிடைக்காததால் பலசரக்கு லாரிகளில் ஏறிச் செல்லவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். பல பேருந்துகளில் அதிக பயணிகள் இருந்ததால், சமூக இடைவெளியும் கேள்விக்குறியானது.