தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் – அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்புக்கு அனுமதிக்கலாம் என திமுக., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்தன. தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் அனுமதிக்கலாம் என்று அவை கருத்து தெரிவித்தன.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்தும் ஆலோசனை நடத்துவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர். அப்போது அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையால், ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதனை சமாளிக்க, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தப் பட்டது.
முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது என்றும், ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தயாரிப்பு என்று சொல்லித் திறந்துவிட்டு, வேறு வேலை பார்ப்பார்கள் என்றும் கருத்துகளைப் பரவ விட்டு, எதிர் அரசியல் செய்து கொண்டிருந்த திமுக., காங்கிரஸ் ஆகியவை, திடீரென தங்கள் கருத்துகளில் இருந்து பின் வாங்கின.
ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தற்போது ஆக்சிஜன் தேவைக்காக ஆலையைத் திறக்க சம்மதித்தன.
இது குறித்து திமுக எம்.பி., கனிமொழி கருத்து தெரிவித்த போது, ‛ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தவிர்த்து வேறு எந்த செயல்பாடுகளுக்கும் மின்சாரம் வழங்கக் கூடாது… என்று கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் அக்கட்சியின் முத்தரசன் குறிப்பிடுகையில், ஸ்டெர்லைட் ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் . தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜனை தமிழக அரசின் அனுமதி இல்லாமல் பிற மாநிலங்களுக்கு வழங்கக்கூடாது ஆலை முழுவதும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அரசு ஆக்சிஜன் தயாரிக்க எந்தவித ஆட்சேபனையும் இல்லை’ எனக் கூறினர்.
பெரும்பாலான கட்சிகள் ஆக்சிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசும் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான முடிவை எடுக்கும் எனத் தெரிகிறது.
ஏற்கெனவே தில்லியில் உயர் நீதிமன்றம், ஆக்சிஜன் தயாரிப்புக்கு எதிராக யார் இருந்தாலும் தூக்கில் போடுவோம் என்று கருத்து தெரிவித்தது. உச்ச நீதிமன்றமும் ஆக்சிஜன் தயாரிப்புக்கு எதிராக இருப்பவர்கள் மீது தனது கோபத்தை வெளிப்படுத்தியது.
இந்நிலையில், நாள் ஒன்றுக்கு சுமார் 500 மெ.டன் ஆக்சிஜன் தயாரித்து வழங்க தாங்கள் தயாராக இருப்பதாக வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததால், அது தொடர்பாக கருத்துக் கேட்டுள்ள நிலையில், தமிழக அரசு தங்கள் தரப்பு கருத்தை உடனடியாகத் தெரிவிக்க வேண்டியுள்ளதால், உச்ச நீதிமன்றத்தின் கோபத்துக்கு ஆளாகாத நிலையில் தங்கள் தரப்பு கருத்தைத் தெரிவிக்க உள்ளதாகக் கூறப் படுகிறது.