தேர்தல் வெற்றிக் கொண்டாட்டமா வன்முறை் ஆட்டமா? மேற்கு வங்க வன்முறைகளுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. அதே நேரம், இதற்கு தக்க நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறது.
இது குறித்து இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை:
மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற அடுத்த வினாடியே கட்டற்ற வன்முறை வெடித்துள்ளது. தெருக்கள் தோறும் இந்துக்கள் தாக்கப்படுவதாக வருகின்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
இந்து பெண்கள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். சிறுவர்களும், குழந்தைகளும் கூட இந்த மதவெறிக் கூட்டத்தின் வன்முறையில் இருந்து தப்ப முடியவில்லை. தேசப் பிரிவினையின் போது இந்துக்கள் மீது எப்படி கொடூரமான முறையில் தாக்குதல்கள் நடைபெற்றதோ, அதை நினைவு படுத்துகின்ற விதமாக அதே பாணியில் தற்போது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.
பங்களாதேஷிலிருந்து ஊடுருவிய ஊடுருவல்காரர்கள், இஸ்லாமிய பயங்கரவாதிகள் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு இந்துக்கள் மீது, குறிப்பாக பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் மீது கொடூரமான வகையில் தாக்குதல்களை நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதல்களை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.இதற்கு காரணமான மத பயங்கரவாதிகள் மீதும், மம்தா பானர்ஜி அரசு மீதும் மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து, அங்கே பரிதவித்து வரும் இந்துக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
அமெரிக்காவில் இனவெறி பிரச்சனை என்றால் இங்கே கண்டனம் தெரிவிக்கின்ற தமிழக அரசியல் கட்சிகள், ஈரான் ஈராக்கிற்காக இங்கே போராடுகின்ற கட்சிகள் மேற்கு வங்கத்தில் ஈவு இரக்கமின்றி மனித குலத்தின் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்களை கண்டும் காணாமல் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கின்றது. அனைத்து அரசியல் கட்சிகளும் இதை கண்டிக்க முன்வர வேண்டும்.
இதற்கு காரணமானவர்களை மக்கள் முன், ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்ட முன் வர வேண்டும். மேலும் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். போன்ற சட்டங்களை உடனே அமல்படுத்தி, இதுபோன்ற கலவரங்களை நடத்தும் வெளிநாட்டினரை கண்டுபிடித்து மத்திய மாநில அரசுகள் உடனடியாக அவர்களை வெளியேற்ற வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.