ரூ.3 லட்சம் செலுத்தினால் உடல் தருவோம் என்ற தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த அப்பாவின் உடல் வேண்டாம் என அவரது மகள் மறுத்ததால் நிர்வாகம் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே இராமசாமி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் 12 நாள் சிகிச்சைக்குப் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் ராமசாமியின் மருத்துவச் செலவிற்காக இதுவரை ஒன்றரை லட்சம் ரூபாய் கட்டி இருப்பதாகவும் மேலும் மூன்று லட்ச ரூபாய் கட்டினால் அவரது உடல் தரப்படும் என்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் அவரது மகள் ஜாஸ்மினிடம் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜாஸ்மின் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும் எங்கள் அப்பாவின் உடலை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறி விட்டு விறுவிறுவென சென்றது தனியார் மருத்துவமனை நிர்வாகிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதுகுறித்து ஜாஸ்மின் கூறியபோது மருத்துவமனை நிர்வாகம் அநியாய கொள்ளை அடிப்பதாகவும், ஏற்கனவே ஒன்றரை லட்சம் ரூபாய் கட்டி இருக்கும் நிலையில் மேலும் மூன்று லட்ச ரூபாய் கேட்டதாகவும் அதனால்தான் உடலை வாங்க மறுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.