தனது வீட்டின் வாசலில் விளையாடிய நான்கு வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கும் சுழல் உருவாகியுள்ளது.
இந்த சூழலில் பல பெற்றோர்களின் அலட்சியத்தால் பல குழந்தைகள் உயிரிழந்து வருகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.
வெங்கடேஷ் என்ற நபர், சென்னையை அடுத்த குரோம்பேட்டை அம்பேத்கர் நகர் வ.உ.சி தெருவில் வாழ்ந்து வருகிறார். சலவை தொழில் செய்து வரும் இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், 6 வயதில் கயல்விழி என்ற மகளும், 4 வயதில் சர்வேஷ் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை கணவன் மனைவி வீட்டிற்க்குள் இருந்த போது சர்வேஷ், தனது வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளான்.
இந்நிலையில், சிறிதுநேரம் கழித்து அவனது பெற்றோர் வெளியே வந்து பார்த்த போது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த தங்களது மகன் சர்வேஷ், மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அக்கம் பக்கம் என பல இடங்களில் தேடியும் அவன் கிடைக்காததால் பதறி போன பெற்றோர், வீட்டின் முன்புறம் உள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டியின் மேல் மூடப்பட்டிருந்த பலகை சற்று விலகி இருந்ததால், சந்தேகத்தின் பேரில் பலகையை எடுத்து பார்த்தபோது தண்ணீர் தொட்டிக்குள் சர்வேஷ் மூழ்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே குழந்தையை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற அனுமதித்த நிலையில், அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை சர்வேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
வீட்டின் முன்புறம் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை சர்வேஷ், எதிர்பாராதவிதமாக தரைமட்ட தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்து இருப்பது தெரிந்தது.
இது குறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.